விண்ணவன்

 

                               

நிழலாடியது

உமையாள் நிமிர்ந்தாள்.

நந்தினியின் பின்னால் ஆபிஸ் டீம்.

நந்தினி கைதட்டினாள்.

பின் அனைவரும்.

என்ன மேடம்?

கை பற்றி குலுக்கினாள்.

நம்ப பிளானை ஜேகே சார் அப்ரூவ் பண்ணிட்டார். அந்த மால்

கன்ஸ்ட்ரக்‌ஷன் பிராஜெக்ட் நமக்கு கிடைச்சிருச்சு.

உமையாள் முகம் மலர்ந்தாள்.

நம்ப எல்லாரோட பிராஜெக்ட் இது மேம்.

நந்தினி சிரித்தாள்.

உமா.. உமா.. த கிரேட் உமா.

சொல்லிக்கொண்டே ஸ்வீட் ட்ரே நீட்டினள்.

உமையாளுக்குப் பிடித்த பிஸ்தா ரோல்.

நந்தினி மேம். ஒரு ரிக்வஸ்ட்.

சொல்லு டார்லிங்.

இன்னிக்கு சிக்கீரம் கிளம்பறேன்.

தாராளமாக கிளம்பு. ரகு கிட்ட ஆயிரம் ரூபா பணம் வாங்கிக்கோ. உன் ஃபேமிலி மெம்பெர்ஸை அழைச்சிட்டு ஹோட்டல் போய்ட்டு வா. உன்னோட வெற்றியை செலபரேட் பண்ணு உமா.

உமையாள் மகிழ்ச்சியுடன் தலையசைத்தாள்.

கலைந்தார்கள்.

தோளை யாரோ தொட்டார்கள்.

உமையாள் திரும்பினாள்.

யமுனா.

என்னடி கலக்கிட்டே.

என்னத்த..

நம்ப இந்திரா காந்தி இன்னிக்கு செம மூடுல இருக்கு. பெரிய ப்ராஜெக்ட்ல.

சிரித்தாள்.

சரி.. சீக்கிரம் போக பர்மிஷன் வாங்கிட்டு இன்னும் கிளம்பலையா? நீ தனியா வேற போகணும்.

ஆமாண்டி.. நீதான் வர முடியலை.

என்ன பண்றது? கோவிலுக்கு போற நேரம் பாத்து எனக்கு வந்துடுச்சு. மகாசிவராத்திரி அன்னைக்கு  நம்ப ஊர்ல உள்ள எல்லா சிவன் கோவிலுக்கும் போறதா ஒரு வருஷம் பிளான் பண்ணினோம். கடைசில இப்டி ஆய்டுச்சு.

அடுத்த வருஷம் கட்டாயம் போகலாம்.

சரி.. கிளம்பு. ஆட்டோக்கு சொல்லிட்டியா?

ராபர்ட் ஊர்ல இல்லையாம்.

அப்ப ஒண்ணு செய். நேரமாய்டுச்சு. கால் டாக்ஸி எடுத்துக்கோ.

என்கிட்ட ஒரு நம்பர் இருக்கு. கூப்பிட்டுக்கோ.

சரி. நம்ப சந்துக்கு வரமாட்டாங்க. ரோட்டுக்கு போய் கூப்பிட்டுக்கறேன்.

சரி கிளம்பு.

யமுனா கொடுத்த நம்பர் எங்கேஜ்டாகவே இருந்தது.

சுற்று முற்றும் பார்த்தாள்.

ரோட்டில் ஆட்டோதான் இருந்தது.

போலாமா மேடம்?

இல்லபா. நிறைய இடம் போகணும். கார் வருது.

சொல்லிட்டீங்களா?

இல்ல.

நம்ப பையன் பக்கத்துல தான் இருக்கான். வரச் சொல்லவா?

யோசித்தாள்.

நியாயமாத்தான் கேப்பான்.

தயங்கி தலையசைத்தாள்.

வந்தவன் பையனில்லை.

நடுத்தர வயது ஆள்.

எங்கமா போகணும்?

சொன்னாள்.

இத்தனைக் கோயிலா?

ஆமாம். முதல்ல தஞ்சபுரீஸ்வரர் வெண்ணாத்தங்கரை. அப்றம் பூக்குளம் சிவன் கோவில், வடக்கு வீதி, மேலவீதில மூணு கோவில். கடைசியா பெரிய கோவில்.

சரி.

ஏறி உட்கார்ந்தாள்.

கார் இடது பக்கம் திரும்பியது.

ஏன் இந்த பக்கம் திருப்புறீங்க?

உங்களுக்கு தெரியாதா? மேலவீதியில ரோடு ரிப்பேர். பாதாள சாக்கடை வேலை நடக்குது. இப்படியே அலங்கம் வழியா  தமதமாமேடை போய் மூலஅனுமார் கோவில் வழியா வடக்கு அலங்கம் , கரந்தை அப்படியே வெண்ணாத்தங்கரை.

சரி. எனக்கு சரியா ரூட் தெரியாது. பாத்து போங்க.

எதேச்சையாக நிமிர்ந்து பார்த்தாள்.

டிரைவர் கண்ணாடி வழியாக இவளையே பார்த்துக் கொண்டு கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

ஃபோனில் யாரிடமோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டே வந்தான்.

அண்ணா.. டிரைவ் பண்றப்ப ஃபோன் பேசாதீங்க.

முக்கியமான கஸ்டமர்ங்க.

அதுக்கப்புறமும் மூன்று கால் பேசினான்.

ஃபோனை எடுத்தாள்.

சார்ஜ் இல்லை.

அண்ணா.. என் ஃபோனுக்கு சார்ஜ் போடலாமா?

கொடும்மா.. என்கிட்ட எல்லா பின்னும் இருக்கு.

கை நீட்டி ஃபோனை வாங்கினான்.

பின் பக்கம் சாய்ந்தவள் கண் அயர்ந்தாள்.

வண்டி சடன் பிரேக் அடிக்க கண் விழித்தாள்.

பாதையில் இருட்டா இருந்தது.

அண்ணா .. இவ்ளோ இருட்டா இருக்கே எந்த இடம்?

இது சுறுக்கு வழி. சுடுகாட்டு ரோட்டோட போனா சீக்கிரமா வெண்ணாறு பாலத்துக்குப் போய்டலாம்.

சுடுகாடா?

பயப்படாத்ம்மா. தெரிஞ்ச ரூட் தான்.

ஏன் வண்டி நிக்குது?

சனியன் பிடிச்ச எருமை மாடு குறுக்கே நிக்குது,

தடக்கென பின்பக்க கதவை ஒரு கை திறந்தது.

யாரு..?

பயந்து நகர்ந்தாள்.

அவன் உள்நுழைந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

மறுபக்கம் கதவு திறந்து இன்னொருவன் உள் நுழைந்தான்.

சிலீரென அடிவயிற்றில் பயம் கத்தியாய்க் கிழித்தது.

டேய்.. யாருடா நீங்க?

பயத்தில் அவள் குரல் குழறியது.

பக்கத்தில் இருந்தவன் டிரைவரிடம் சொன்னான்.

சுடுகாட்டு கிரவுண்டுக்குப் போ.அங்க ஒரு கருவக் காடு இருக்கு. யாரும் வரமாட்டாங்க.

உமையாள் கைகூப்பிக் கதற ஆரம்பித்தாள்.

அமானுஷ்ய சப்தத்துடன் அந்த விநோதமான வானூர்தி வந்து இறங்கியது.

மிக பக்கத்தில் ஒரு பெண்ணின் அலறல் சப்தம் கேட்டது.

ஃப்ரிட்ஜ்  போல்  வெண்ணிற வெளிச்சத்துடன் ஒரு கதவு திறந்தது.

ஊதாநிற புகை ஒரு திட்டு போல் வெளிவந்தது.

சப்தம் வந்த திசை நோக்கி நடக்க ஆரம்பித்தது.

நடக்க நடக்க ஊதா நிற புகை கலைந்து ஓர் உருவமாய் மாறத் தொடங்கியது.

காரின் முன்னால் போய் நின்றது.

டிரைவர் கத்தினான்.

யேய்.. யாரோ ஆள்.

இறங்கிப் பாரு.

டிரைவர் அருகில் போனாண்.

யார்டா நீ.. கிழம்?

டிரைவர் கை ஓங்கினான்.

ஓங்கிய கை அந்தரத்தில் நின்றது.

அந்த உருவத்தின் நெற்றியிலிருந்து ஒரு தீஜ்வாலை கிளம்பி அவன் கண்களைத் தீய்த்தது.

டிரைவர் அலறினான்.

பின்சீட்டிலிருந்து இருவரும் இறங்கினார்கள்.

அந்த உருவத்தின் விழிகள் அசைந்தன.

அங்கிருந்து புறப்பட்ட தீப்பந்தம்  ஒன்று முதலில் போனவனை தாக்கி எரியூட்டியது.

இரண்டாவது ஆள் திரும்பி ஓட ஆரம்பித்தான்.

தீப்பிழம்பென மூன்று கூர்முனைகள் கழுகின் மூக்கென பறந்து போய்அவன் முதுகை பிளந்தன.

அந்த உருவம் மெல்ல இவளை நோக்கி வந்தது.

கார்க் கதவைத் திறந்தது.

இவள் அருகில் அமர்ந்தது.

மிக அருகில் பார்க்கும் போதுதான் தெரிந்தது.

அந்த உருவம் இடையில் புலித்தோல் அணிந்திருந்தது.

உமையாள் தலை சுற்றி அதன் மடியில் சரிந்தாள்.

 

**********************************

 

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  1. சிவனே நேர்ல வந்துட்டார். (தேஜு சிவன்.)