இருள் – அத்தியாயம் 1

1.

நிம்மதியின்மை ஒரு வரம். அது யாரையும் சாந்தமாக இருக்கவிடாது. உள்ளே ஓயாத கொதிப்பு. துாக்கத்திலும் குத்திக்குடையும் இம்சை.

இன்றும் நான் பதறித்தான் எழுந்தேன். அறைக்குள் இருள் கப்பியிருந்தது. நெஞ்சு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. எனக்கு ஒன்றும் ஆகவில்லை. தலைமாட்டில் இருந்த செல்போனை எடுத்து மணி பார்த்தேன். ஐந்தைத் தாண்டியிருந்தது. நிம்மதியுடன் எழுந்து கழிவறைக் கதவைத்திறந்தேன். இரண்டோ மூன்றோ என்றால் சங்கடந்தான். பேய்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இரவின் ஒலிகள் பேய்களின் வருகையைப் போல பாவனை செய்யும். இருளுக்குள் இருளாக உருவங்கள். அறைக்குள் என்னுடன் யார்யாரோ இருக்கிறார்கள். அவர்களும் என்னைப்போன்று ஆறாத ரணங்களுடன் விடிய விடிய என் தலைமாட்டில் அமர்ந்திருக்கிறார்கள். இதோ என்னைத் தொட்டுத்தீண்டி தங்களின் தனிமையைப் போக்கிக்கொள்ளப் போகிறார்கள். இதோ இன்மையில் இருந்து மெல்ல மெல்ல ரூபம் கொண்டு காட்சியாக உருவெடுக்கப் போகிறார்கள். அதிகாலைக்குப் பிறகு அவர்கள் ஓய்வெடுக்கப் போய் விடுவார்கள். ஐந்து மணிக்கு மேல் அவர்கள் வெளிப்பட வாய்ப்பில்லை. பிரம்ம முகூர்த்தத்தை நாணும் பேய்கள். ஒளிக்கு கரையும் நிழல்கள்.

கழிவறைக்குள் குந்தி அமர்ந்தேன். குதம் ரணமாக வலித்தது. இரண்டு நாட்கள் சரியாக உறங்கவில்லை. உறக்கம் தடைபடும்போதெல்லாம் குதங்களின் விளிம்புகள் வீங்கிச் சிவந்து விடுகின்றன. எப்போதுமே வெளிக்கிருக்க வேண்டும் என்பது போன்று நமைச்சல். வந்து அமர்ந்தால் குருதியாக கொப்பளிக்கின்றது. இது ஒன்றே போதும் ஒரு நாளை நாசம் செய்ய. எத்தனை முறைப்பட்டாலும் புத்தி வருவதே இல்லை. என் பிழைப்பும் அவ்விதந்தான் அமைந்திருக்கிறது.

கோப்பையில் சிந்திப்பரவும் செந்திறத் திரவத்தை நெஞ்சம் பதறத்தான் பார்க்க முடிகிறது. இடதுகை ஆள்காட்டி விரலினால் குதங்களின் விளிம்புகளை நீவி ஆறுதல் தேடினேன். குதத்தின் உள்ளே விரலினைச் செலுத்தி வீக்கங்களை அடையாளம் கண்டேன். அளவுக்கு அதிகமாக உள்ளே திணித்த  பஞ்சு மூட்டையின் கோணலான வாயினைப் போல புடைப்புகள். ஒரு ஓரத்தில் சிறிய கட்டி. அதுதான் அதிகமாக காந்தியது.

அறையை விட்டு வெளியே வந்தேன். தென்னைகள் தென்றலில் பித்தேறி அலைபாய்ந்து கொண்டிருந்தன. இதமான காற்று. நெஞ்சு ரோமங்களுக்குள் புகுந்து தடவிச் சென்றது. அதிகாலையைப் போல அற்புதம் வேறு உண்டா? குற்றாலத்தில் இன்று குளிக்க விடுகிறார்களா? என்று கேட்க வேண்டும். அருவியின் கீழே அசையாமல் நின்று பிடறி அறைகளை வாங்கினால் குதம் குளிரும்.  குதவிளிம்புகள் உஷ்ணம் ஏறி சுடுகின்றது.

வானம் விசித்திரமாக இருந்தது. வெள்ளைப் பஞ்சுகளினால் ஆன ஓவியங்கள். ஆற்றுமணல் விரிப்பினை ஒத்த வரித்தடங்கள். கடல் அலையை உறையச் செய்ததைப் போன்ற நுரைப்பரவல்கள். வெகு தொலைவில் விடிவெள்ளி. ஒற்றை ஒளிர்வுடன். என் கையில் புத்தம் புதிய ஒருநாள். ஐம்பத்து எட்டாவது வயதில் மேலும் ஒரு நாள். நான் ஒன்றுமே செய்யாமல் வீணடிக்க மேலும் ஒரு வாய்ப்பு. இறைவா..நீ எத்தனை கருணை நிரம்பியவன்.

சிறிய பாம்புக்குட்டி ஒன்று என் தலைமாட்டில் ஊர்ந்து சென்றது. எப்படியோ அதன் வருகை எனக்குத் தெரிய வருகிறது. நான் பயந்து எழுந்து பாம்புக்குட்டியை அடிக்க கம்பினைத் தேடுகிறேன். மொசைக் தரையில் குட்டியால் வேகமாக  செல்ல முடியவில்லை. நடக்க நிலமற்றவனைப் போல தள்ளாடுகிறது. தரையில் பறக்கிறது. அரை வட்டங்களாக வேகம் கொள்கிறது. சட்டென்று போர்வைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறது. உள்ளே செல்வி படுத்திருக்கும் நினைவு வர பாய்ந்து போர்வையை இழுக்கிறேன். செல்வியின் நெஞ்சில் பாம்புக்குட்டி எவ்வி ஏறுகிறது. “ஐயோ“ என்று கதறி அவளைப் படுக்கையில் இருந்து துாக்கித் தோளில் போடுகிறேன். பாம்புக்குட்டி அவள் பாத நுனியைக் கவ்வி துள்ளி நெளிகிறது. தொங்கி அலைகிறது.

அவ்வளவுதான். துாக்கம் கலைந்துவிட்டது. ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கோலம்.

செல்வியின் ஐந்து வயது முகம். என் அம்மையின் முகம். அவள் முகத்தில் பாதி என்னுடையதும். பெரிய உதடுகள். அகன்ற நெற்றி, சுருள் கேசம். முன்நெற்றியில் கீழே நீண்டிருக்கும் உச்சி ரோமத்திரட்சி. “என் மகளே..”

வெளிச்சம் தரையிறங்கியது. பறவைகள் சலம்பத் தொடங்கின. தெருவின் கெட்டித்த அமைதி மனித அசைவுகளால் உடைந்துவிழ ஆரம்பித்தது. அறைக்குள் வந்து தலைமாட்டில் வைத்திருந்த பாலிதீன் பொட்டலத்தைப் பிரித்தேன். யானையின் வலிநிறைந்த பிளிறலைப் போல ரயிலின் வருகை. தண்டவாளங்கள் அதிர்ந்தன. சுமை தாளாமல் புலம்பின.

லாட்டரிச் சீட்டுகள். நேற்று மட்டும் நான்காயிரத்திற்கு எடுத்திருந்தேன். ஒரு கோடி முதல் பரிசு. மஞ்சள் காகிதத்தில் மலையாள லிபிகள். மதியம் மூன்று மணி வரை அப்படியே காற்றில் மிதக்கச் செய்யும் போதை வஸ்து.  இன்று மதியத்திற்கு மேல் பல லட்சங்களுக்கு அதிபதியானாலும் ஆவேன். மீதி உள்ள வாழ்நாட்களை கவலைகள் அற்று வாழ்ந்து தீர்க்க வரமளிக்கும் தெய்வம். அனைவராலும் கைவிடப்பட்டவன், ஏமாற்றப்பட்டவன்,தோற்கடிக்கப்பட்டவன், தன்னைத்தானே தொலைத்தவன் வேறு எதை நம்புவது?. எந்தவித நம்பிக்கையும் இன்றி எவ்விதம் உயிர்வாழ்வது?

நுாற்றி ஐம்பது ரூபாய் தினக்கூலி. இப்ராஹிம் பாய் ஜவுளிக்கடையில் விற்பனை ஆள். வடக்குரத வீதியில் வந்து போகிறவர்களை வேடிக்கை பார்ப்பதே ஒருநாளின் பெரும்பகுதியில் நிகழக்கூடியவை. சாயந்திரத்திற்கு மேல்தான் ஆட்கள் வருவார்கள். பகல் முழுக்க வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். மாதம் பிறந்தால் மூவாயிரம் அறை வாடகை. நாயுடு டிபன் கடையில் மாதக் கணக்கு. காலையில் ஒரு பொங்கலும் ஒரு வடையும். நாற்பது ரூபாய்.மதியம் துளசி ஓட்டலில் சைவச் சாப்பாடு. அறுபது ரூபாய். இரவில் இரண்டு சப்பாத்திகள் அல்லது ஐந்து இட்லிகள். ஐம்பது ரூபாய். இவ்வளவுதான் என் தேவைகள்.

இவற்றைத் தவிர ஆனந்தம் கொள்ள வேறு ஒன்றுமே இல்லை. சுகருக்கு வைத்தியம் ஒன்றே மருத்துவச் செலவு. மாதம் ஆயிரத்தை லபக்கென்று மெடிக்கல்காரனுக்கு கொடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்கான மூன்றுவகை மாத்திரைகள். ஏறக்குறைய தொண்ணுாறைத் தாண்டும் எண்ணிக்கை. சுகர் மாத்திரைகள் காலியானால் பதற்றம் தொற்றிக்கொள்ளும். நெஞ்சு வலிப்பது போன்றும், சிறுநீரகங்கள் திறன் இழப்பதும் போன்றும் கற்பனைப் பயங்கள் வலுப்பெறும். ஐந்தாறு தடவைகள் ஒன்றுக்குப் போய்வந்தால் பீதி கிளம்பும். உடனே கடன் வாங்கியாவது மாத்திரைகளை வாங்கி வரவேண்டும். இன்னும் எத்தனைக் காலம் இருக்கிறது? ஐந்தா, பத்தா இல்லை அடுத்த மாதமா, வரும் வாரமா? நான் கிளம்புவதற்கு தயாராகி விட்டேனா? அறைக்குள் யாருமற்று வாய் பிளந்து கைலி விலகிக்கிடக்க, சவமாகிக் கிடக்கப்போகிறேனா? விடைபெறும் நாள் எந்நாளோ?

நான் செத்தால் உண்மையில் துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழ ஒரு ஜீவன் உண்டா?

என் மக்களே என்னை ஏன் கைவிட்டீர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *