ஏறத்தாழ கடவுள்

 

நான் நடித்துக்கொண்டிருந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கான விவாதம் முடிந்து நள்ளிரவில் வீடு சேர்ந்ததும் அப்படியே படுக்கையில் விழுந்திருந்தேன். விடிந்து சில மணி நேரங்கள் நெருங்கியிருக்கும் வேளையில் அந்த அழைப்பு வந்தபோது தலை கனக்க அரைத்தூக்கத்தில் எடுத்தேன். எதிர்முனையின் சொற்கள் உடைவுடன் கேட்டாலும், ’கொலை வழக்கு’ என்பது மட்டும் மீண்டும் மீண்டும் செவிகளில் பதிவுசெய்யப்பட்டதுபோல் விழுந்தது. உடல் சோர்வை உந்தித்தள்ளி எழுந்தமர்ந்து தொடுதிரையில் இணைய சேவைக்கான குறியீட்டைத் தொட்டதும் குழாயிலிருந்து காற்றடைத்து தண்ணீர் சொட்டுவதுபோல் வாட்ஸப் செய்திகள் அலை அலையாக வரத் துவங்கின. உள்ளே நுழைந்து இறுதியாக வந்த குறுஞ்செய்தியை, சுருங்கியிருந்த இமைத்தட்டை ஒற்றைக் கையில் கசக்கியபடி பார்த்தேன். நண்பர் குறிப்பிட்ட சில தகவல்கள், ஒரு புகைப்படம். அது பிரபா அண்ணனுடையது. கட்டிலிலிருந்து நிதானமற்ற நடையுடன் முகத்தைக் கழுவி, மீண்டும் குறுஞ்செய்திகளைப் படித்தேன். யாருக்கும் மறுமொழி அளிக்கவில்லை. 

ஓரளவு விஷயம் பிடிபட்டதும் கிளம்பத்தான் வேண்டுமென மனம் உந்த, ஆடைகளைக் களைந்து குளியலறைக்குள் சென்றேன். நூற்றுக்கணக்கான துளைகள் வழியாக சீறிப்பாய்ந்த சின்னஞ்சிறு அருவியிலிருந்து குளிர்ந்த நீர் முகத்தில் அறைய நினைவுகள் ஒழுக நின்றிருந்தேன். உடலுடன் மனமும் சலிப்படைந்திருந்தது.

பிரபா அண்ணனுடன் எவ்வளவு ஆத்மார்த்தமான உறவு. பலரும் தேடித்தேடி அக்கவிஞனைச் சந்தித்து தங்களால் முடிந்ததை அவருக்கு செய்துகொண்டேதானே இருந்தனர். ஏன் அண்ணனால் மட்டும் தன் மனத்தை இழக்காமல் இருக்க முடியவில்லை? அவர் காலுக்கு யார்யாரோ சங்கிலிபோட்டு கட்டிவைத்திருந்தாலும் மனதிற்கான சங்கிலியை அவரேதானே போட்டுக்கொண்டார்?  நிமிடங்கள் கடந்ததும், குளியல் சோர்வை அகற்றியது. துண்டை முதுகிற்கு விட்டு நன்றாக துடைத்துக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பொலி கேட்க வெளியே வந்து, என்ன நடந்தது என கேட்டேன். யாருக்கும் எதுவும் முழுமையாகத் தெரியவில்லை. 

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து காவல்நிலையம் செல்ல காரை மெதுவாக இயக்கி, நுழைவுக் கதவருகே பணியிலிருந்த காவலாளியிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டு யாராவது வந்தால் அழைக்கச் சொன்னதாகக் கூறினேன். ஏசியைக்கூட்டி வைத்து சீட் பெல்ட் அணிந்ததும் அடுக்கக தளத்திலிருந்து சீட்டுக்கட்டின் குழைவுபோல் கார் தார் சாலைக்கு இறங்கியது. மைய சாலையை அடைவதற்குள் பிரபா அண்ணனுடைய நினைவுகள் தேரைக்குஞ்சு நிலத்திலிருந்து நீருக்குள் துள்ளுவதுபோல் கணம்விட்டு கணம் நினைவைத் தொட்டன. அண்ணனா? அவராக இருக்காது. ஏதோ தவறு நிகழ்ந்திருக்கிறது; இரவில் சுற்றித்திரிந்தவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கலாம். இத்தனையாண்டு பழக்கத்தில் ஒருவரை தீச்சொல் சொல்லிகூட கேட்டதில்லை. அவருண்டு அவர் குடியுண்டு. எப்போதும் அந்த உடலிலிருந்து வன்முறை துளிர்க்கக் கண்டதில்லை. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கொசுக்கடி குதற அரை உறக்கத்திலிருப்பவர் கொசுக்களைப் பலம்கொண்டு கைகளால் தட்டினார் என்றால்கூட நம்புவது சிரமமானது. எவ்வளவு பெரிய கவிஞன்? சந்தேகமே இல்லாமல் பெரிய கவிஞன். அவர் மெல்ல மெல்ல மேன்மையை நோக்கி நகர்ந்தவர். தன் எழுத்தால் ஒவ்வொரு நாளும் சுடர் அணையா திரிபோல் எழுந்தவர். எப்போதாவது என் வீட்டில் மூளை பிதுங்க குடிப்பவர் அதிகாலையே எழுந்து கவிதைகளை எழுதுவதை எத்தனை முறை பார்த்திருப்பேன்? எவ்வளவு தாள்கள்? வீட்டையே நிரப்பினாலும் பிதுங்கி நிற்கும் சொற்கள். அப்படி ஒரு வைகறையில், ”என்ன இயேசுவே இன்னைக்கே எல்லாத்தையும் எழுதிட்டு சாகலாம்னு முடிவு பண்ணிட்டியா? என்றதற்கு, “எழுத எழுத உயிர்போறதைவிட பெரிய விடுதலை இருக்கா? மெழுகு மாதிரி வெளிச்சத்தை உருவாக்கி கரையறதுதான் சரி” என்றார். படைத்துக்கொண்டே இருந்ததாலோ என்னமோ பிரபாவின் தோற்றமும் அலைவுறும் மனமும் அவன் நம்மைப்போல் கணக்கு வழக்குகளுக்கு அடங்குபவன் இல்லையென்பதை மிக விரைவாகவே உணர்ந்தேன். கணம்கணமாக அவர்  எதார்த்ததிற்கும் மாயைக்கும் நடுவே பறந்தபடியே இருந்தார்.  

அதற்கிடையே, ஒவ்வொரு நாளும் தற்கொலைப் பாதைக்கு சென்றுகொண்டிருந்த பிரபா என்றாவது தன் வாழ்க்கை இப்படியானதற்கு நானே காரணம் என புலம்புவார் என எதிர்பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் தன் ஊழை ஏற்றுக்கொண்டவர். தனக்குக் கிடைத்த தண்டனைகளை மிக கனிவாகப் பெற்றவர். திருமணம் செய்து வைத்தால் என்ன? ஒருமுறை கேட்டுப்பார்த்தேன். “உன் கவிதைய படிச்சுட்டு எத்தனை பொண்ணுங்க உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்காங்க. அதுல யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான”? அச்சொல்லை ஒவ்வொரு முறையும் நிராகரித்தார். ஆனால், தன் காதல் கவிதைகளில் ஆக்ரோஷமான உணர்வுகளையும் மன்னிப்பு கோரல்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒருநாள் போதையில், “ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்ற? மேட்டர் பண்ண முடியாதுன்னுதானே?” என்றேன். வெட்கம் மின்ன, “அண்ணன் அதையெல்லாம் கடந்து வந்துட்டேன்” என்றார். 

இரண்டே ஆசைகள் மட்டுமே அவருக்கு இருந்தன. தான் எழுத நினைத்த நாவலை முடிக்க வேண்டும்; 95 வயதிலிருக்கும் தன் தந்தைக்கு முன் சாகக்கூடாது. துருவேறிய இரும்பில் தங்கப்பூசல் போல அந்த ஆத்மா அவரின் தந்தையைத் தேடிக்கொண்டிருந்தது. கன்யாகுமரியில் படப்பிடிப்பு நடக்கும்போதெல்லாம் ஓய்வு கிடைத்தால் நாங்குநேரி சென்று, தந்தையின் காலடியில் அமர்ந்து ஒரு சொல்லையாவது கேட்டுவிட வேண்டும். அருவமில்லாத அச்சில சொற்கள் பல்லாயிரம் உருவங்களாக பிரபா மனதில் குடியேறிவிடும். தன் பிதாவிடம் ஒவ்வொரு கணமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்த மைந்தன். அம்மன்னிப்புகளின் விசும்பலாகவே எழுத்தாற்றல் சொட்டிக்கொண்டிருந்தது. கொலை செய்கிற மனநிலை எப்போதும் ஓர் கூருணர்வுபோல் மனிதனிடம் இருப்பதுதான். வந்தால், மார்பு சளிபோல ஒளிந்திருக்கும். ஒருவன் பிறக்கும்போதே அவனுடைய குரூர தருணங்களும் துவங்கிவிடுகின்றன. பிரபா அதைச் செய்திருக்கக்கூடிய தருணத்திற்குள் சிக்கிக்கொண்டாரா? 

காலை நேர நெருக்கடியில் நகரமே கைவிடப்பட்ட மனிதத் தலைகளாகவே தென்பட்டது. மெட்ரோ பணிகளால் வண்டியை வேகமாகச் செலுத்த முடியவில்லை. ஏசியை அணைத்து ஜன்னல் கண்ணாடியைக் கீழிறக்கியபோது புழுதித்துகள்கள் முகத்தில் அப்பின, மீண்டும் கண்ணாடியை ஏற்றிவிட்டேன். தலைக்கு மேல் பாலத்தின்  கட்டட விளிம்பிலிருந்து நீர் துளிகளாக ஒழுகிக்கொண்டிருந்தது. இருபுறமும் விளம்பர பதாகைகள். ஒவ்வொரு எண்ணாக தேடித்தேடி அழைத்தேன். இன்னும் சில கி.மீ. தொலையில் காவல்நிலையம் இருந்தும் ஒவ்வொரு அடியும் மலையில் ஏறுவதுபோல் காருக்குள் அசௌகரியத்தை உணர்த்தேன். பிரபா அண்ணனுடன் நெருக்கானவர்களை அழைத்து விஷயத்தைச் சொன்னால் அவர்களால் முடிந்த தொடர்புகளை வைத்து ஏதாவது செய்யலாம். ஆனால், அழைப்பை மேற்கொள்ளக்கூட மனம் நிலைகொள்ளவில்லை. ஜன்னல் கண்ணாடியைத் திறந்து எச்சிலைத் துப்பிவிட்டு, வண்டியை மெதுவாக செலுத்தியபோது மணி அழைத்தான். 

“ணோவ்… இந்தாளு குடிச்சுட்டு கம்னு இருக்காமா எவன் கழுத்தையோ புடிச்சு என்னமோ பண்ணிட்டாரு… கேமராவுல அப்டியே காமிக்குது. போலீஸ்காரன்கிட்ட ஒன்னும் பேச முடியல. சீக்கிறம் வா” என்றான். 

 “ஒழுங்கா பாத்தீங்களா? அண்ணனா அது? அவரெல்லாம் அப்படி பண்ணமாட்டாருடா. அந்த வீடியோவ எனக்கு அனுப்பு”

“ஊரே நியூஸ்ல பாத்துட்டு இருக்கு.. அந்த சேனலை பாரு. கரெண்ட் கம்பத்துகிட்ட யாரையோ புடிச்சு தள்ன மாதிரிதான் இருந்துச்சு” 

நான் தொடர்பைத் துண்டித்து வண்டியை ரோகிணி திரையரங்க சாலையின் ஓரமாக நிறுத்தி அவசர அவசரமாக மணி அனுப்பிய முகநூல் இணைப்பைத் தொட்டேன். மங்கலாக யாரோ ஒருவர் கடுமையாக இன்னொரு ஆளை இழுத்துக்கொண்டிருந்தார். அடிப்பதுபோலவோ தள்ளிவிடுவதுபோலவோ இருந்தது. ஏசியை என் பக்கமாகத் திருப்பி கூர்ந்து கவனித்தேன். வற்றிய தேகம், எப்போதும் ஒரு உந்தல் இருக்கும் உடல்… நீளமான தலைமயிர். ஆம், நின்றுகொண்டிருந்த உடல் பிரபா அண்ணனுடையதுதான். அவருடைய முடியை என் படத்திற்காக வளர்த்துக்கொண்டிருந்தார்.

சில நொடிகள் உடல் தசைகளில் குளிரூசி குத்த அமர்ந்திருந்தேன். கை விரல்கள் ஸ்டேரிங்கை பிடித்தபடி அசைய மறுத்தன. என்ன இது? அதே உடல்; ஆண்டுக்கணக்கில் பார்த்துப் பார்த்து என் நினைவு முழுக்க படிந்த முகம்; அதே தள்ளாட்ட உதறல்;  எப்படி இப்படி நடந்திருக்கும்? ஏதாவது அடிதடி தகராறில் எதேச்சையாக நடந்துவிட்டதா? இல்லை நிலைகொள்ளாத போதையில் தாக்கிவிட்டாரா? மீண்டும் விடியோவை நிறுத்தி நிறுத்திப் பார்த்தேன். எல்லா கோணங்களிலும் அவர்தான். இரு மனநோயாளிகள் தாக்கிக்கொண்டதில் ஒருவர் கொலை என செய்தித் தலைப்பு மின்னி மின்னி மறைந்ததில் எனக்கு உள்ளே அதிர்வுகள் ஏற்பட்டன. மனநோயாளியா? அந்த அடையாளம் என்னை சீற்றம் கொள்ளச் செய்தது. 

அவர் பித்துநிலையிலேயே இருந்தவர். அப்பித்து நுண்ணுர்வு அற்றவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதது. வாழ்க்கையை நழுவவிட்ட முகவெட்டு. ஆனால், அதில் அதற்கான எந்த குற்றச்சாட்டுகளும் ஏமாற்றங்களும் இல்லை. சொல்லப்போனால் மனமாயைகள் அதிகரிக்கத் துவங்கி பராரிபோல் அலையத் துவங்கியபோதே முழு கருணையும் அம்முகத்தில் கவிய ஆரம்பித்திருந்தது.

உண்மையில் பெருங்கவிகள் மென்மையும் நிலையாமையும் கொண்டவர்களே. மேன்மையான குணம் இன்னொரு உயிரை எடுக்குமா? மிக மிக உணர்ச்சிவசப்படக் கூடிய மென்மையானவர்களே இன்னொரு எல்லையில் கடும் குரூரமானவர்களாகவும் இருப்பதைத்தானே என் இத்தனையாண்டு கால வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். இரு துருவம்போல் அன்பும் வன்மமும் அலைக்கழிக்கும் போராட்டங்களை ஒருசேர மனதிற்குள் குமைந்து அழுபவர்கள். அன்பென்றாலும் வம்பென்றாலும் உணர்ச்சிப்பூர்வமானர்கள் முதலில் எதையாவதை கையில் எடுத்துத் தானே தீர வேண்டும்? ஒருவேளை அண்ணன் அதைச் செய்திருந்தால்? ச்சே, என்ன கேவலமான எண்ணம்? 

கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் இருக்கும்போது சாம்பல் நிற புறாவை பூனையொன்று வாயில் கவ்விச் சென்றதைப் பார்த்தவர் அதன்பின்னாலே சென்று செத்த புறாவை அடக்கம் செய்தவர். அந்தக் கவிஞனா சாலையில் ஒருவரைக் கொன்றிருக்க முடியும்? குடித்துவிட்டு அதே பூனையிடம், “டேய் நீ யாரையும் கொல்லக்கூடாது. உன்னை நம்பித்தான் அவன் பறக்காம இருந்தான். அவனைத் துரத்தலாமா?” ஓர் இரவில் புலம்பிக்கொண்டிருந்த அண்ணனைப் பார்த்து உதவி இயக்குநர்கள் சிரித்ததை மறக்க முடியுமா? படப்பிடிப்பு முடிந்த மதிய நேரத்தில் அப்பூனை செத்து மிதந்ததைக் கண்ட பிரபா குத்துகாலிட்டு சாக்கடை ஓரம் அழுதுகொண்டிருந்ததை மறக்க முடியுமா? அவன் ஒரு மனிதனை கீழே தள்ளிவிட்டு மிதிப்பதை கற்பனை செய்யவே அபத்தமாக இருக்கிறது. 

எந்த ஒரு உயிரும் தன்னை நம்பி இப்பூமிக்கு வந்ததாகவே நினைத்துக்கொண்டிருந்தார். பூவும் இலையும் அவற்றை உண்ணச் சுற்றும் சிறு உயிரும் எல்லாம் அவருக்காக இங்கு வந்ததாகத் தன் கவிதைகளில் கொண்டு சேர்த்தார். அவர் 30 செல்போன்களைப் பயன்படுத்தியவர். நானே பத்து செல்போன் வரை வாங்கிக்கொடுத்திருக்கிறேன். ஒவ்வொன்றும் எங்கே செல்கிறது என்பதை அறிந்திருந்தாலும் ஒவ்வொரு எண்ணும் மறையும் கணம் அண்ணனிடமிருந்து ஏதோ ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வரும். ஒவ்வொரு செல்லிடப்பேசியும் அவர் கையிலிருந்து நழுவும்போதும் என் கை அங்கே இன்னொன்றைக் கொடுத்தபடியே இருந்தது. இறுதியாக ஒன்றைக் கொடுத்துவிட்டு, ‘இதையும் தொலைச்சுடுண்ணே’ என்றேன். 

அதை இரு விரல்கள் தாங்க பெற்றுக்கொண்டவர், “தம்பி. செல்போன் வைச்சுருந்தா சிட்டுக்குருவி செத்துப்போயிரும்டா… இதைக் கைல புடிக்கற ஒவ்வொரு நேரமும் சிட்டுக்குருவிகதான் ஞாபகத்துக்கு வருது” என்றார். ‘அல்லல் படுபவன் என் நண்பன், ஆபத்திலிருப்பன் என் சகோதரன் காரணம் அவனும் மனிதன்’ இதை எழுதிய கையா ஒருவனை நெரித்துக் கொன்றிருக்கப் போகிறது? 

சாலையில் தேர் அசைவதுபோல் கார் செல்வதாக எனக்குத் தோன்றியது. முன்னாள் ஆம்னி பேருந்து ஒவ்வொரு அடியாக நகர, நீண்ட நாள்கள் கழித்து மனப்பதற்றம் அதிகரிக்கத் துவங்கியதால் ஏதாவது பாட்டைக் கேட்டு சிந்தனைகளை திசைதிருப்ப ஒலிப்பானை அழுத்தினேன். கேட்டு அலுத்த பாடல்களைத் தவிர்த்து, பாடகர் திலீப் வர்மன் பாடிய, “எங்கெங்கு நீ சென்றபோதும்..’ பாடலை வைத்தேன். பாடல் முடிந்ததும் கண் கலங்க மீண்டும் பதற்றத்தின் உச்ச வெறுப்பை அடைந்தேன். கோயம்பேடு மேம்பாலத்தைக் கடந்ததும் முதலில் தென்படும் மதுபானக்கடை திருப்பத்திற்கு அருகே இருபுறமும் சாக்கடைத்தடம் பாயும் சந்திற்குள் நானும் பிரபாவும் கதைகளைப் பேசியிருக்கிறோம். முழுபோதையில் தலைகுப்புற மண்ணைக் கட்டியாளும் கோணத்தில் பிரபா அப்படி ஒரு சந்திற்குள் மயங்கிக்கிடந்ததைப் பார்த்ததிலிருந்ததுதான் எனக்கும் அவருக்குமான அறிமுகம் துவங்கியது. 

கார் செல்லச் செல்ல நான் நடித்திருக்க வேண்டிய திரைப்படத்தின் போஸ்டர்கள் வரிசையாக தென்பட்டன. பிரபா நிறைய திரைப்படங்களில் வசனகர்த்தாவாக, பாடலாசிரியராகப் பணிபுரிந்தவர். சம்பளம் என என்ன கொடுத்திருப்பார்கள்? மொத்தமாக பத்தாயிரம் ரூபாயை அவர் கையில் கொடுத்தால், செல்ல வேண்டிய பாதையையே மறந்துவிடுவார். அவர் அறையில் ஒவ்வொரு புத்தகத்திலும் அந்நோட்டுகளை வைப்பார். ஆனால், அதை கொள்ளையடிக்கவும் ஒரு கும்பல் கிளம்பிவரும். பணத்தையெல்லாம் என்ன பண்ண? எனக் கேட்டால், “குடிச்சோம்” என்பார். ஒரே நைட்ல அவ்வளவு பணமும் குடியால் கரையுமா? கூடக்குடித்தவன் எவனாவது திருடிச்சென்றிருப்பான். அது தெரிந்தாலும் வெளியே சொல்லவே மாட்டார்.

காவல்நிலையம் அமைந்திருக்கும் சாலைக்கு எதிர்ப்புறம் வந்துகொண்டிருப்பதைப் பார்த்த மணி ஸ்டேஷன் வாசலருகே நின்றபடி கையசைத்தான். ஓரமாக காரை நிறுத்திவிட்டு, காவல்நிலைய வளாகத்திற்குள் நுழையும்போது எனக்கு முன்பே வந்த பிரபாவின் நண்பர்கள் சாலை நடைபாதையில் குழுவாகச் சுற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். தெரிந்த முகங்களிடம் புன்னகைத்துவிட்டு விறுவிறுவென ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும் நேர் எதிராக சில மேஜைகள் தென்பட்டன. அதில் குடித்துவைக்கப்பட்ட தேநீர் டம்பளர்களுடன் கணினி பாகங்கள் சிதறிக்கிடக்க, லப்பர் பேண்ட் போடப்பட்ட நிறைய செல்போன்களைக் காவலர் ஒருவர் பெட்டிக்குள் அடுக்கியபடி முறைப்பதுபோல் முகத்தைக் காட்டினார். இளம் யுவதி ஒருவர் தன் லேப்டாப்புடன் பையைத் திருடனுக்குக் கொடுத்த நிகழ்வைத் தேம்பி தேம்பி அழுதபடி கூறிக்கொண்டிருந்தார். பெண் காவலர், “பேக்க தூக்கிட்டு போற வரை எவனைப் பராக் பாத்துட்டு இருந்த…? தூக்கிட்டு போனவன் இந்நேரம் பிரிச்சு தின்ருப்பான்.. ஓரமா போய் அழு… நமக்குன்னே வருதுக” என்றார். 

மேலே மின்விசிறி க்ரீச் ஒலியுடன் வட்டமடித்துக்கொண்டிருக்க, கொஞ்சம் முன்னேறி வலதுபுறமாகத் திரும்பியதும் சில லாக் அப் செல்கள். ஒரே அறைக்குள் சட்டையில்லாமல் சில இளைஞர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடிக்கும் மொழி கேட்டது. யாரிடமாவது கேட்கலாமா? பிரபா முன்னால்தான் இருக்கிறார் என மணி என்னை உந்தினான். கால்களை நகர்த்தும்போதெல்லாம் மூலைக்கு மூலை வாக்கி – டாக்கிகளின் அலறலுடன் வெளியே மரத்திலிருந்த பறவைகளின் கீச்சும் கலவையாகக் கேட்டபடியே இருந்தது. இடையே காவலர்களின் கணீர் குரல்கள் பாதுகாப்பின்மையை அளித்தன. வெவ்வேறு வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டவர்களுடன் குடும்பத்தினர் பேசத் துடித்துக்கொண்டிருந்தனர். ரைட்டர் அருகே கைவிலங்கிட்ட வயதான பெரியவர் குத்துகாலிட்டு அமர்ந்திருந்தார். ஒவ்வொரு நகர்வுக்கும் காவலர்கள் தென்பட்டு, யாரு, என்ன? என்பதற்குள், என் கண்கள் பரபரப்பாகத் தேட, முக்கோண வடிவ மூலைப்பகுதியில் அமைந்திருந்த ஒரு செல்லில் முகத்தசைகள் வீங்கியிருக்க சட்டையில்லாமல் கசங்கலான கால்சட்டையுடன் கைகளை மார்போடு சிலுவைபோல் கட்டிக்கொண்டு பிரபா அண்ணன் ஒடுங்கி நின்றிருந்தார். என் மொத்த எடையும் ஒன்றுமில்லாமல் ஆக, அடிவயிறு சில்லிட்டது. இங்கிருந்து ஓடிப்போ என கால்கள் கதறும் ஓசை சொடக்குகளாகக் கேட்டன. காய்ந்திருந்த முகம் என்னைப் பார்த்து சலனமில்லாமல் நின்றிருந்தது.

“அண்ணே..’ குரல் தடைபட அடித்தொண்டையிலிருந்து கேவல்தான் வந்தது. மீண்டும் குரலைச் சரிசெய்தபடி அருகே சென்றேன். 

கையில் கோப்புகளைச் சுமந்தபடி என்னருகே வந்த காவலர், “சார்… யார் நீங்க? அக்யூஸ்ட் கிட்டலாம் பேசக்கூடாது. வெளிய போங்க” என்றார். 

கம்பிகளுக்குள் வற்றிய வெளிச்சத்தில் பிரபா யாரையோ பார்ப்பதுபோல் என்னை நோக்கினார். கோபம் தலைக்கேற அண்ணனைப் பார்த்து காவல் நிலையம் அதிர, “கையக் கீழ எறக்குண்ணே” எனக் கத்தினேன். குரலின் உறுதியால் அமர்ந்திருந்த காவலர்கள் ஒவ்வொருவராக எழுந்து என்னைச் சூழ, “எதுக்கு சார் இவரைக் கைது பண்ணீங்க? என்ன பண்ணாரு? சட்டையில்லாம கையக்கட்டி நிக்க வைச்சுருக்கீங்க.. அவர் யார்ன்னு தெரியுமா? ஆத்திரத்தில் என் சொற்கள் கோர்வையற்று விழத் துவங்கியது. எண்ணற்ற கோப்புகள், அலமாரிகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், லத்தியை வைப்பதற்கென்ற இரும்பால் செய்யப்பட்ட ஸ்டாண்ட், சில பிரோக்கள், ஓயாமல் சலசலப்புடனே இருக்கும் அறைகள் என் பதற்றத்தை அதிகரித்தன. 

எங்கிருந்தோ ஒரு குரல், ‘இங்க வந்தா அமைதியா இருக்கணும் தெரியாதா? என்றது.

“எதுக்கு அமைதியா இருக்கணும்? எப்ஐஆர்-ல என்ன எழுதியிருக்கீங்க? செத்துப்போனவர் யார்னு தெரியுமா? யாராச்சு இவர்மேல புகார் கொடுத்தாங்களா? இறந்தவர் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் இருக்கா?”

நான் கேட்பதை யாரும் மதிப்பதுபோல் காட்டிக்கொள்ளாமல் ஒவ்வொருவராக அவரவர் அதிகார இடங்களுக்கு நகர்ந்தனர். 

“இன்னும் ரிப்போர்ட் ரெடி ஆகல…” டீயைக் குடித்துக்கொண்டே ஒரு காவலர் பதிலளித்தார். 

“என்ன சார் பதில் இது? எப்படி ஒருத்தர் செத்தார்னே தெரியாமத்தான் இவரைக் கைது பண்ணீங்களா?..” 

“சார். கொஞ்சம் நிதானமா இருங்க. வெளில வெயிட் பண்ணுங்க. டாக்டர் ரிப்போர்ட் வரட்டும். இந்தாளு மேல தப்பு இல்லன்னா கூட்டிட்டு போயிரலாம்..” வாக்கி – டாக்கியை இடுப்பில் சொருகியிருந்த காவலர் அதட்டும் மொழியில் என்னை விரட்ட முயற்சித்தார்.

வாக்குவாதம் முற்றியபோது என்னை இன்னொரு காவலர், “சார்… சண்டை போட்டீங்கன்னா, தேவையில்லாம பிரச்னைதான் வரும். கொஞ்சம் அமைதியா இருங்க” என்றார். 

 “ஏதாவது வாங்கிக்கொடுத்தீங்களா சார்? இப்படி சட்டை இல்லாம ஒருத்தரை நிக்க வைக்கறது மனுஷ தன்மையே கிடையாது. அவர் எவ்வளவு பெரிய ரைட்டர் தெரியுமா?” ஆவேசம் கொந்தளிக்க நிறுத்தாமல் பேசியது எனக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது. மணி தண்ணீர் போத்தலைக் கொடுத்ததும் நிதானமானேன். வெளியே இருந்த நண்பர்கள் என் குரல்கேட்டு கதவருகே வந்து எட்டிப்பார்க்க, மூச்சுவாங்க பிரபா அண்ணனிடம் சைகை மொழியில் பேச கையை உயர்த்தியபோது, இரு பெண் காவலாளிகள் என்னருகே வந்து, “யார் சார் இவர்?” எனக் கேட்டனர். 

“பிரபா. பெரிய கவிஞர். எழுத்தாளர். என் படத்துலதான் நடிச்சுட்டு இருக்கார்.” சப்தம் அதிகமில்லாத குரலில் சொன்னேன். 

‘யாரு… இந்தாளா?’ இரு பெண்களும் லத்தியைத் தரைக்கும் அடிவயிற்குமாகப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தனர். எரிச்சலில் என் கால்கள் நடுங்கின. “நம்ம ஸ்டேஷன்ல ரைட்டர் வேலைக்கு வைக்கலாம்டி” என்றார் ஒரு கன்னி. 

மணி என் தோள்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு வெளியே அழைத்து வந்தான். மீதமிருந்த தண்ணீரில் முகத்தைக் கழுவி, போத்தலைக் கோபத்தில் வாசலருகே தூக்கி எறிந்தேன்.

எப்பேற்பட்ட கவி அவன் என்பதை வாசிக்காதவர்களிடம் சொல்லி எப்படி புரிய வைக்க முடியும்? வாழ்நாள் முழுக்க குற்றவாளிகளையும் குற்றவாளிகள்போல் இருக்கும் நிரபராதிகளையும் பார்த்தே பழக்கப்பட்ட கண்களுக்கு கசங்கிய மனிதன் நல்லவனாகத் தெரிய எந்த வாய்ப்புகளும் இல்லை. கசங்கியவனா? இல்லை பிரபா பொன்னால் ஆன ஆணி. வாழ்க்கை அளித்த ஒவ்வொரு குழியிலும் தானாக சென்று பொருதியவன். இயற்கையுடன் இணைந்தவன். புறத்தோற்றத்தில் எவனும் அவனை வெறுத்தாலும் அவனுடைய அகம் நுண்ணுணர்வாளர்களைத் தவிர்த்து எவராலும் அறிய முடியாத ஒரு வெளி.  அடித்திருப்பார்களா? ஆடைகளைக் கழற்றிப் பார்த்திருப்பார்களா? கடும் வார்த்தைகளைப் பேசியிருப்பார்களா? அப்படி நடந்திருந்தால் எந்த முகம்கொண்டு அவரைக் காண்பேன் என்பதே தொண்டையைக் கடுமையாக்கியது.

மேன்மையும் பித்தும் பொற்கொன்றை கொட்டிக்கிடப்பதுபோல் பிரபாவைச் சுற்றி இருந்தன.  “அண்ணே, நீ தங்க என் வீடு இருக்கு.. உனக்கு என்ன வேணுமோ பண்ணித்தறேன். ஆனா, நீ எழுத ஆசைப்படற அந்த ஏறத்தாழ கடவுள் நாவலை மட்டும் எழுதிரு”. என் விருப்பங்களில் ஒன்றாக அவர் அந்த நாவலை எழுதிமுடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், அதற்கு அவர் தன்னைக் குடிக்கு அர்பணிக்காமல் இருக்க வேண்டும். உண்மையில், பிரபாவின் குடியைப் பற்றி இலக்கிய உலகில் ஒரு மயக்கம் உண்டு. அது ஒளியை அளித்ததாகவும் அவரையே அழித்ததாகவும் ஏகப்பட்ட பேர் எழுதியிருக்கின்றனர். ஆனால், என் வீட்டிற்கு வந்து தங்கினால் குடிக்க வேண்டாம் என ஒரு வார்த்தை சொன்னால், மாதக்கணக்கில் அதைத் தொடாமல் இருந்திருக்கிறார். அக்கட்டுப்பாடு என்னை இன்றுவரை ஆச்சரியப்படுத்துகிறது.

ஆனாலும்  குடி எத்தனை பேரை அழித்துவிட்டது. எழுதி எழுதியே ஒளியை நோக்கிச் சென்ற கலைஞர்கள் துணைக்கு இந்த திரவத்தை  அழைத்துக்கொண்ட தர்க்கத்தின் விசை புரியவில்லை. ஒவ்வொரு முறையும் குடிக்கும்போது எனக்குள் புதிதாக ஒரு துணிவு வந்தபடியே இருந்தது. இந்த சினிமாவில் எதையாவதை செய்துவிடலாம் என்கிற ஆக்ரோஷமும் அதன்பொருட்டு அனைத்தும் தெரிந்தவனாக என்னை மாற்றும் கணங்களில் எதிரே அமர்ந்து குடிக்கும் பிரபா அண்ணனை, போதை வண்ணக் கோழிக்குஞ்சைப் போல் கருணையின் வடிவமாக மாற்றும். அன்பைத் தவிர அப்போதை வேறு எதையும் கக்கக் கற்றுக்கொடுக்கவில்லை. அடிக்கடி சொல்வார்; மது என் மனைவி, சிகரெட்கள் பிள்ளைகள் என. எவ்வளவு நிதானம் விட்டாலும் தன் வாழ்க்கை தடம்புரண்ட ஏமாற்றத்தின் சுவடுகளை ஒருகணமும் தடவிப்பார்த்து, ’வீணாகிவிட்டேனே’ என எந்த வார்த்தையையும் அவர் உதிர்த்ததில்லை.

ஒருநாள் என் வீட்டில் இருவரும் மது அருந்தினோம். நான் குவாட்டர் அடித்தபோது அவர் ஃபுல்லை ஏற்றிவிட்டார். போதுமென அதட்டி படுக்கவைத்தேன். சொற்கள் தள்ளாட அப்படியே தரையில் கை கால்கள் விரிய மலர்ந்தார். சலனமே இல்லை. அறைக்குள் இருளைப் பரப்பிவிட்டு நானும் அரைபோதையில் தன்னுணர்வுடன் படுக்கச் சென்றேன். அதிகாலை இரண்டு மணிவாக்கில் தாகம் எடுக்க கண்விழித்தபோது அறையில் விளக்கொளி இருந்தது. பதறியெழுந்து அவர் படுத்திருந்த இடத்திற்குச் சென்றேன். கோணலாகக் குப்புறப்படுத்தபடி மயங்கிக்கிடந்தார். இடதுகை மட்டும் தரையோடு தரையாக துழாவிக்கொண்டிருக்க, வலதுகை விரல்களுக்கிடையே பேனா சாய்ந்திருக்க ஒருதாளில் நேர்த்தியாக அச்சடித்ததுபோல் கையெழுத்து மின்னிக்கொண்டிருந்தது. மது பிரபாவின் பல்லாயிரம் நரம்புகளுக்கு சூடு வைத்தது. ஆனால், மூளையிலிருந்து வலதுகை விரலுக்குச் செல்லும் நரம்பை மட்டும் அது தீண்டவே இல்லை. தலைநிக்காத போதையிலும் கவிச்சொற்கள் தட்டச்சுபோல் தாளில் ஏறியிருக்கிறது. விளக்கை அணைத்துவிட்டு நான் படுக்கறைக்குத் திரும்பியதும் பிரபாவின் இடதுகை ஓங்கித் தரையை அடித்தது. ஒருகணம் உடம்பெல்லாம் சிலிர்க்க அச்சத்துடன் கட்டிலுக்குத் தாவினேன். 

“அண்ணே… எப்படியாச்சு, அவரை வெளில கொண்டுவரணும்னே. அவரெல்லாம் அப்படி பண்ணக்கூடிய ஆளு இல்லை. போலீஸ்காரனுங்க ஆளு கிடைக்கலன்னு தூக்கிருப்பானுங்க”. ஒரு தள்ளாட்டம் இருந்ததால், “குடிச்சுருக்கியா?” என்றேன். 

“ஆமாண்ணே, மனசு கேக்கல… உனக்கு போன் பண்ணிட்டு உள்ள போய் பார்த்தேன், சட்டையில்லாம பாவமா நின்னுட்டு இருந்தாரா, டீ குடிக்கீங்களாண்ணேன்னு கேட்டேன். எதுவும் சொல்லாம சிரிக்கற மாதிரி மூஞ்சை காட்னாரு. ஒரு போலீஸ் இந்த பைத்தியகாரனுக்கு இவ்ளோ பழக்கமா? கஞ்சா கூட்டான்னு கேட்டான். எனக்கு பயமாயிருச்சு. அதாம்ணே” 

நான் வேறேதுவும் சொல்லாமல், என் செல்போனை எடுத்து எடுக்காத அழைப்பிற்கு அழைத்து விஷயத்தைச் சொல்லவும் புதிதாக காவல்நிலையம் வந்தவர்கள், ஒருவரை ஒருவராகத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். காலை பத்து மணிக்குள்ளாக செய்தி வேகமாகப் பரவ எதிர்பாராத விதமாக நிறைய பேர் ஸ்டேஷனுக்கு வந்துகொண்டிருந்தனர். 

காவல்நிலையத்தில் யாரிடமும் சரியான பதிலில்லாததால் சம்பவம் நடந்த இடத்துக்கு மணியை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு கடையாகச் சென்று சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தேன். துல்லியமான நேரத்திற்குச் செல்ல முடியவில்லை. அருகே எனக்கும் பிரபா அண்ணனுக்கு நெருங்கிய கவிஞர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் செல்லலாம் என மணியிடம் சொன்னபோது, “அண்ணே இவரை போலிஸ் புடிக்கும்போது அந்தாளுகிட்ட போய் பிரபாவை தெரியுமான்னு கேட்ருக்காங்க. தினமும் இங்க உக்கார்ந்துதான் குடிப்பான் வேறெதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டார்ன்ணே” என்றான். 

சாலையோர நடைபாதை பெட்டிக்கடைக்கு அருகே சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துவிட்டு பஞ்சைத்தொடும்வரை சீரற்ற வேகத்தில் புகைக்கத் துவங்கினேன். “அப்படியா சொன்னான்…?”, “ஆமாண்ணே, போலீஸ்க்கு பயந்தாலும் எத்தனை வருச பழக்கம்?” புகையின் காட்டம் தலைக்கு அடிக்க, தூக்கிவீசிவிட்டு ஆத்திரத்தில் இன்னொரு சிகரெட்டை உதட்டிற்கிடையே அமர்த்தி கொள்ளிவைத்தேன். மதியமானதால் வெயில் சுட்டெரிக்க, சம்பவம் குறித்து பழக்கமான முகங்களிடம் விசாரிக்கலாமென வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திறங்கிய காய்கறிகளும், பழங்களும், பூக்களும் பரந்துகிடந்த கோயம்பேடு சந்தைக்குள் நுழைந்தேன். 

சில தெரிந்த கடைக்காரர்கள் கொலை வழக்கானது பற்றி தெரியாது என்றதும் மீண்டும் காவல் நிலையம் சென்றேன். நடிகர் சந்திரன், மலர் அக்கா, இயக்குநர் பாரதி அங்கு காத்திருந்தனர். அவர்கள், பெரிய ஆட்களுக்குத் தகவல் சொல்லி மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்க வைத்தனர். நான் வளாகத்திற்குள் நுழைந்ததும் செய்திகளால் வந்த பரபரப்பால் எவரையும் உள்ளே விடவில்லை. யார் யாரோ செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருக்க, நானும் பேசிவிட்டு உடற்கூராய்வு முடிவுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை. மீறி உள்ளே சென்று அவரைப் பார்க்கவும் குற்றவுணர்வாக இருந்தது. காரில் சென்றுமர்ந்து முகநூலுக்குள் நுழைந்தேன். “கொலையும் செய்வான் கவிஞன்”, “கவிஞன்னா அமைதியாவன், கனிவானன்னு நினைக்கறானுங்க.. இப்பவாச்சு தெரிஞ்சுதா, இருக்கறதுலயே பெரிய கொலைக்காரப் பாவிக அவனுங்கதான்”, “இவனுங்க இன்னும் விபச்சாரம் மட்டும்தான் பண்ல.. எவன் குடிக்க காசு கொடுக்கறான்?” சில பதிவுகள் தென்பட வரிசையாக நட்பு நீக்கம் செய்தேன்.

எண்ணங்களைத் திசைதிருப்பும் பொருட்டு அருகே இருந்தே கடை ஒன்றில் தேநீருக்குச் சொல்லிவிட்டு பப்ஸ் துகள்கள் கொட்டியிருந்த நாற்காலியைத் தட்டிவிட்டு அமர்ந்திருந்தேன். எதிரே இருந்த மேசையில் இரு ஈக்கள் முழுதாகக் காயாத சிந்திய தேநீர் தடத்தை மொய்த்துக் கொண்டிருந்தன. “சாப்பிட்டுருப்பாரா”? உண்மையில், அந்த நாவலை எழுதிமுடிக்கும் வரை உயிருடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே உணவை நாடினார். ஏழத்தாழ கடவுள், ஏன் அப்பெயரைத் தேர்ந்தெடுத்தார்? இளமையில் பிழைப்பதற்காக சென்னையிலிருந்து இரயிலில் மும்பை சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் பழக்கமாயிருக்கிறான். இரயில் பெட்டிகளுக்குள் நடந்து நடந்தே இருவரும் நெருக்கமாகிவிட்டனர். அந்த சிறுவன் என்னையும் உங்ககூடவே மும்பைக்கு கூட்டிட்டு போங்கண்ணே என பிரபாவிடம் கெஞ்சியிருக்கிறான். ஆனால், இவர் வேண்டாம் என மறுத்துவிட்டார். மும்பை சென்ற சில நாள்களில் இவருக்கு முன்பாக ஒரு ரயில் நிலையத்தில் இறங்கிய சிறுவன் அதே இடத்திலேயே உயிரிழந்த தகவல் பிரபாவை வந்ததடைந்தும் பாலாஸ்ட் கற்களாக உடைந்திருக்கிறார். அவனை தன்னுடனே அழைத்து வந்திருக்க வேண்டுமென ஒவ்வொரு இரவிலும் வதைபட்டார். சாதாரண தற்செயல், பிரபாவுக்குள் சிதைக்குள் சிக்கிய குற்றவுணர்வாக மாறியது. அந்த நினைவுகளையொட்டியே அந்நாவலை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். 

“சரி உங்க ரெண்டு பேர்ல யார் அந்தக் கடவுள்..” ஒருமுறை கேட்டேன். கலகலவென இருந்த முகம் சட்டென வாடி பெரும் மௌனத்திற்குத் திரும்பியது.

ரசாயனத்தைவிட கொடூரமாக இருந்த தேநீரை சுவைபார்த்த கீழே ஊற்றிவிட்டு, மீண்டும் காவல்நிலைய வளாகத்திற்குள் நுழைந்தபோது கூட்டம் நன்றாகக் கூடியிருந்தது. பிரபாவின் வாசகரான முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி உள்பட சமூகத்தில் கவனிக்கப்படுபவர்களின் முகங்கள் தென்பட்டன. பேருந்து முனையத்திலிருந்து கிளம்பிய ஒவ்வொரு பேருந்தும் காவல் நிலையத்தில் எதற்கு இத்தனை பேர் என மலங்க பார்த்து. அண்ணனுக்கு நெருக்கமான ஆள் என்பதால் என்னிடம் பலரும் நிலைமையை விசாரித்தனர்.

வேறு வேறு குற்ற வழக்குகளுக்காக காவல் நிலையம் வந்தவர்களும் எங்களிடம் வந்து என்ன ஆனது என விசாரித்தனர். ஆய்வாளரைப் பார்க்கலாம் என காவல்நிலையை வாசல் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தபோது சில காவலர்கள் பிரபாவை எட்டி எட்டி பார்த்து தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்தபடி கலைந்தனர். ஒரு காவலர் என்னிடம் வந்து, “யாருங்க இவரு? ஐபிஎஸ், எம்.பி. எல்லாரும் இவருக்காக இன்ஸ்பெக்டர்கிட்ட பேசியிருக்காங்க” என்றார். அந்த உடலில் ஒரு அடக்கம் தெரிந்தது. நான் மென்மையாக சிரித்தபடி படியைவிட்டு கீழிறங்கி வளாகத்திற்குள் தனித்திருந்த வேப்ப மரத்தின் தண்டுப்பகுதியில் முதுகை சாய்த்து சோர்வு களைய நின்றிருந்தேன். பக்கவாட்டில் பறிமுதலான எண்ணற்ற இருசக்கர வாகனங்கள். முதலில் தென்பட்ட பைக்கின் எஞ்சின் பகுதியிலிருந்து ஒரு செடி முளைத்து சீட்டைத் தொட்டுக்கொண்டிருந்தது. 

அருகே, இளம் வாசகர் ஒருவர் பிரபாவின் புத்தகம் ஒன்றை மௌனமாக ஜபம் சொல்வதுபோல் வாசித்துக்கொண்டிருந்தார். அதை வாங்கி ஒரு பக்கத்தைத் திறந்து ஒரு கவிதையின் நடுவிலிருந்து வாசித்தேன். 

அதில்,

“பெரும் சப்தத்தோடு அது

சரிந்து விழுந்தது மற்றொரு உறக்கத்தில்

காலையில் கண்விழித்த

இலைகளெல்லாம் கண்டன

ஒரு கனவு போல

காணாமல் போன மரத்தை”. 

அந்த வரிகளையே மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன். மரத்திற்குப் பின்னாலிருந்த சிறிய திண்ணைபோன்ற கல்லில் அமர்ந்ததும், பிரபாவைக் கேட்டு சிரித்த இரு பெண் காவலர்கள் தயங்கித் தயங்கி என்னை நோக்கி வந்தனர். இருவரும் தங்களின் லத்திகளை மரத்தில் சாய்த்துவைத்தனர். அருகே வந்தவர்கள், “சாரி சார். அவர் யார்ன்னு தெரியாம பேசிட்டோம்.” நான், “பரவால்ல விடுங்க” என்றதும் பவ்யமாக மறைந்தனர். காலுக்குக் கீழே இருந்த வேப்பம் பழத்தை எடுத்து கிள்ளிவிட்டு முகர்ந்துபார்த்தேன். ஒட்டுமொத்த மரத்தின் கசப்பும் அந்த பழத்தின் மதுரத்திற்காகவே திரண்டுவருவதாகத் தோன்றியது. 

சமூக வலைதளங்களில், செய்தி சேனல்களில் விஷயம் விவாதங்களைக் கிளப்பும் வேகத்தில் வைரலாகிக்கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல, காவல் நிலைய வளாகத்தில் கூட்டம் கூடியது. மாலை ஐந்து மணிக்கு மேல் அதிகாரிகள் என்னை உள்ளே அழைத்தனர். இந்நேரம் காவல்துறை விசாரணையில் பிரபா என்னென்ன சொல்லியிருப்பார் என அனுமானங்கள் வரிசைகட்டின. ‘ஒரு மனிதனை நான் ஏன் கொல்லபோகிறேன்?’, ‘நான் கொலை பண்ல சார்’, ‘சும்மா தள்ளிவிட்டேன். வேறெதுவும் தெரியாது’, ‘அது நான்தான்ன்னு நினைச்சுக்கங்க’, ‘அவனுக்கான தேவன் நான்தான்’ ஒவ்வொன்றாக எழுந்தன. அண்ணன் இதையெல்லாம்தான் சொல்லியிருப்பாரா? கண்டிப்பாக குற்றமற்றவர் என்பதை எந்த மனிதனும் சொல்லக்கூடியதுதானே? மனித மனம் முதலில் தன்னைத் தற்காக்கும் பிரயத்தனங்களில் ஈடுபடுவதற்கென்றே படைக்கப்பட்டது. 

தனியறையில் சில அதிகாரிகள் அமர்ந்திருக்க, உள்ளே சென்றேன். பிரபா யார்? எப்படியானவர்? என்கிற விவரங்களைக் கேட்டபின் அந்த சிசிடிவி கேமராவின் மறுபக்கத்தையும் ஆராய்ந்தனர். ரகசிய கண்காணிப்புபோல் சிலர் என்னை உற்றுநோக்கியபடி கணினித்திரையைப் பார்த்தனர். அதில், இறந்தவருக்கு தம்பி இருப்பது தெரிய வந்தது. உடனே அவரை விசாரித்ததில் தன் அண்ணனுக்கு அடிக்கடி வலிப்பு வரும் என்றார். பல நிமிட பேச்சுகளுக்குப் பின் முழுபோதையில் பிரபா, வலிப்பு வந்த அந்த நபரை மீட்கவே தன் கரங்களால் அந்த உடலைத் தொட்டிருக்கிறார் எனத் தெரிந்ததும் என் கண்கள் நிறைந்தன. 

அறையைவிட்டே வெளியே செல்லச் சொல்லி, நிமிட பேச்சுவார்த்தைக்குப் பின் என்னை அதிகாரி உள்ளே அழைத்து, “ஒகே. நீங்க அவரைக் கூட்டிட்டு போங்க, வெளில சுத்த விடாதீங்க, மெண்டலாயிரப்போறார்” என்றார். சில தாள்கள்களில் கையொப்பமிட்ட பின், பிரபா அண்ணன் ஒடுங்கி நின்றிருந்த லாக்அப் நோக்கிச் சென்று, அவர் கட்டியிருந்த கையை என் கைகளால் விடுவித்தேன். காவலர்கள் என்னையே பார்க்க அவரை அழைத்து வெளியே வந்தபோது காவல்நிலையத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர். ஊடக செய்தியாளர்களின் கேமராக்களுக்கு மத்தியில் வாசகர்கள், திரைத்துறையினர், அரசாங்க பொறுப்புகளில் இருப்பவர்கள் என அந்த நுழைவு முழுக்க முழுக்க பிரபாவின் கவித்துவம் உருவாக்கிய படையாகவே தென்பட்டது. ஓரிரு விசாரிப்புகள். அப்போதும் அந்த முகத்தில் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சி துளியும் தெரியவில்லை. 

கூட்டத்தையும் என்னையும் அவர் பொருட்படுத்தவில்லை. வெளியே வந்ததும் அவரிருந்த கம்பிகளையே திரும்பித் திரும்பிப் பார்த்தார். காலில் அணிந்திருந்த செருப்பு எங்கே என கேட்டதற்கு தன் கால்களையே நோக்கிக்கொண்டிருந்தார். சட்டையைக் கொடுத்து பட்டனைச் சரியாகப் போடும்படி கூறிவிட்டு, வாசலைவிட்டு இறங்கும்போது ஒரு ஆதங்கத்தில் ”அடிச்சானுங்களா”? என முகத்தை வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டே கேட்டேன். பிரபா எதுவும் சொல்லாததால் தோள் பட்டைகளில் கையை வைத்து, “சொல்லுணே, இவனுங்க அடிச்சானுங்களா?” எனக் குரலை உயர்த்தினேன். வெளியே பேருந்தின் ஜன்னல்களிலிருந்து ஒவ்வொரு முகமாக எங்களைப் பார்த்து கடந்து சென்றது..

“இல்லை” என்பதுபோல் தலையை ஆட்டினார்.

அதில் எந்த உறுதியும் இல்லாததால், “சம்பவம் நடந்த இடத்துல எவனாச்சு அடிச்சானா… பொய் சொல்லாமா சொல்லு” பல்லாயிரம் பகல்கள், இரவுகள் பழக்கத்தில் அண்ணனின் கண்களை இப்போதுதான் மிக நெருக்கமாகப் பார்க்கிறேன். அதில் ஏதோ லட்சக்கணக்கான மனிதர்கள் ஒழிந்திருப்பதுபோல் பெரும் கதவின் வாசலில் நிற்பதாக உணர்ந்தேன். 

“சொல்லு, எந்த நாயாச்சு மேல கைய வச்சானா?”

தன் கைகளை வயிற்றுக்கு அடியே கோர்த்தபடி அசைவற்று நின்றுகொண்டிருந்தார். “நான் போறேன்…” என வாயைத் திறந்ததும் “ஆமாம்” என்றார். 

என் உடல் எடை முழுவதும் தரையோடு தரையாக அப்பிக்கொண்டதுபோல் இருந்தது. நாக்கைத் தூக்கவே இன்னொரு பிறவி வேண்டும் என்பதுபோல் ஒரு சொல்லை எடுக்க தவித்தேன். கம்பன், கபிலன், தேவதேவன் தொட்ட தமிழைத் தொட்டவன். தான் எழுதிய எக்கவிதையிலும் தன் அடையாளத்தை இணைத்தவனை எவனோ அடித்ததை மனம் ஏற்காமல் அரற்றியது. 

“நீ கொலை பண்லன்னு அடிச்சவன்கிட்ட சொன்னியா…? 

“….”

உடலை உலுக்கிவிட்டு, “அண்ணே, சொன்னியா? நான் கொலை பண்லன்னு” 

நான் கீழ்படியில் நிற்க, அடுத்த அடியை எடுத்து வைக்காமல் மேலே நின்றபடி ஒரு கேவல் இழுவையுடன் பிரபா, “நீதானடா கொலை பண்ணன்னு என்னை தரதரன்னு இழுத்து ரோட்ல தள்ளிவிட்டு கேட்டானுங்க. கடவுள் அதுக்குத்தான் என்னை பூமிக்கு அனுப்பிருக்கார்ன்னு சொன்னேன்.” என்றார்.

கீழே நின்றபடி என்னை நோக்கிக்கொண்டிருந்த அந்தக் கண்களைப் பார்த்தேன். சொற்களின் அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழியில், நீளமான கருங்கூத்தல் கற்றையாக அலைய, கருங்கடலான கருவளையத்தில் இரு திராட்சை விழிகளில் காம்பு கிள்ளப்பட்ட இடத்தில் சாறு வழிவதுபோல் கண்ணீர்ப்பையில் சில துளிகள் காத்திருக்க, மெழுகின் இறுதி ஒளியாக உலகின் இருமைகள் அனைத்தும் அவ்விழிக்குள் சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றியது.

 கருத்துகளைப் பகிர: [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *