மேலக்குடியின் காலைப் பொழுது எப்போதும் போலத்தான் விடிந்தது. நான் வழக்கம்போல எழுந்து, காலைப் பணிகளை ஒவ்வொன்றாக வேகமாக முடித்தேன். அடுத்து காலை எட்டு மணி அளவில் எனது வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தேன்.
அப்போது எதிர்வீட்டு வானொலியில், “ஒளிமயமான எதிர்காலம்” பாடலை டி எம் சௌந்தரராஜன் உன்னதமாகப் பாடிக் கொண்டிருந்தார். அப்பாடலை கேட்கக் கேட்க, மனம் லேசாகி, வானில் பறப்பதுபோல், நான் இசை வெள்ளத்தில் மூழ்கி மிதந்து கொண்டிருந்தேன்.
காலை எட்டு முப்பது மணிக்கு எனது மிதிவண்டியில், நான் வேலை பார்க்கும் தனியார் ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டேன். மிதிவண்டியின் சக்கரம் சுழலச் சுழல, சாலையோரத்து மரங்கள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன.
நான் நாற்சந்தியை நெருங்கியபோது, வழக்கத்திற்கு மாறான ஒரு நிசப்தம் அங்கே நிதானமாக நின்று கொண்டிருந்தது, அருகே இருந்த சிறிய தெருவோரத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. ஆர்வத்தோடு அருகே சென்று பார்த்தபோது, என் இரத்தமே ஒரு நிமிடம் உறைந்து போனது.
சாலையோரத்து புல் பூண்டுகளின் நடுவே மூன்று உடல்கள் கிடக்கின்றன. இரண்டு ஆண்கள், ஓர் இளம் பெண். அந்தப் பெண்ணின் கோலம் என் நெஞ்சைக் கிழித்து, என்னை நிலைகுலைய வைத்தது. சிதைந்த ஆடைகள், உடலில் நகக்கீறல்கள், வன்புணர்வின் வடுக்கள் என அவளது உடல் ஓர் அலங்கோலமான ஓவியமாகத் தெரிந்தது. அந்த இரண்டு ஆண்களின் உடல்களிலும் இரத்தக் கறைகளும், அடியுண்ட காயங்களும் உறைந்து போயிருந்தன.
சுற்றிலும் நின்றவர்களில் சிலர் மௌனமாக வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அரசல் புரசலாக தங்களின் ஐயங்களை வெளிப்படுத்திக் கொண்டும் பலவிதமாக பேசிக்கொண்டும் இருந்தார்கள். அவர்கள் பேசியதில் “காவல்துறைக்குத் தகவல் சொல்லியாச்சு” என்ற ஒரு குரல் மட்டும் எனக்கு தெளிவாய்க் கேட்டது. அங்கே இருப்பவர்களுக்கு அந்த மூன்று நபர்களைப் பற்றி எந்த விதமான தகவலும் தெரியவில்லை.
அப்போது நேரம் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. நான் ஒன்பது மணிக்குள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் எங்கள் அலுவலக நிர்வாகி கோபித்துக் கொள்வார். கண்ணா பின்னாவென்று திட்டி தீர்த்து விடுவார். அவரது திட்டல்கள் மதியம் வரை நீடித்துக் கொண்டிருக்கும். அவை காதுகளை புண்படுத்திவிடும் அளவிற்கு மிக மோசமானதாக இருக்கும். ஆகவே நான் அங்கே அதிக நேரம் நிற்காமல் உடனே வேலைக்குப் புறப்பட முயன்றேன். ஆனால் மனம் அங்கிருந்து நகர மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு வழியாக அந்தப் பரிதாபக் காட்சியை அங்கேயே விட்டுவிட்டு, கனத்த இதயத்தோடு மிதிவண்டியை மிதித்தேன்.
உலகில் நாள்தோறும் எத்தனையோ விபத்துகள், எத்தனையோ மரணங்கள்… இதில் நான் என்ன செய்துவிட முடியும்? என்ற தர்க்கவாதம் ஒருபுறம் இருந்தாலும், அந்தப் பெண்ணின் முகமும் கண்களும் என் மனத்திரையில் நீங்காமல் ஓடிக்கொண்டிருந்தன.
நான் அலுவலகத்திற்குள் நுழையும்போது மணி ஒன்பது ஐந்து. மேலாளர் எதுவும் சொல்லவில்லை என்றாலும், அவரது பார்வையில் ஒருவித விகாரமான எரிச்சல் தென்பட்டது. கணினியின் முன் அமர்ந்தேனே தவிர, என் விரல்கள் வேலை செய்ய மறுத்தன. அந்த மூன்று முகங்களும் ஜன்னல் வழியாக என்னைப் பார்ப்பது போலவே இருந்தது. குறிப்பாக அந்தப் பெண்ணின் சிதைந்த கோலம், ஒரு தீராத குற்றவுணர்வை எனக்குள் விதைத்துக்கொண்டே இருந்தது.
மனம் ஒரு சண்டித்தனம் செய்யும் குழந்தையைப் போல வினாக்களை கேட்டுக் கொண்டிருந்தது. யார் அவர்கள்? பசியால் இடம்பெயர்ந்தவர்களா? அல்லது திசைமாறி வந்த பறவைகளா? அந்த இரண்டு ஆண்களும் அந்தப் பெண்ணைப் பாதுகாக்கப் போராடி இருப்பார்களோ? அல்லது மதுவும் காமமும் கண்ணை மறைத்த யாரோ ஒரு கூட்டத்தின் வெறிச்செயலுக்கு இவர்கள் பலியாகி இருப்பார்களா? விடையில்லாத கேள்விகள் என் மண்டையை குடைந்து கொண்டிருந்தன.
மாலைவரை பலவாறான கேள்விகள் என்னுள் எழுந்தபடி இருந்தது. அவற்றிற்கான விடையைத் தேடித் தேடி மனம் களைத்துப் போனது.
மாலை நேர செய்தித்தாள் அந்த இருண்ட மர்மத்தை மெல்ல மெல்லத் துலக்க ஆரம்பித்தது. . நான் அந்தச் செய்தியை வாசிக்கும்போது என் கைகள் நடுங்கியது. அந்தச் செய்தியின் பின்னணி, என் நெஞ்சைப் பதற வைத்தது. முந்தைய நாள் மாலைப் பொழுதில்தான் அந்த விபரீதம் அரங்கேறியிருக்கிறது.
பிழைப்புத் தேடி ஆயிரம் மயில்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள். வட மாநிலத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து, வயிற்றுப் பசிக்காக இந்த மண்ணை நம்பி வந்திருந்தனர். ஒரு கையில் சிறிய துணி மூட்டையும், மறு கையில் அரைகுறைத் தமிழில் யாரிடமாவது வேலை கிடைக்குமா என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்துத் தெருக்களில் அவர்கள் திக்கற்று அலைந்து கொண்டிருந்தனர்.
எங்கிருந்தோ வந்த அந்த மூவருக்கும். “அமைதிப் பூங்கா” என்று போற்றப்படும் இந்தத்தமிழ் மண்ணில், கிடைத்தது வன்மம் மட்டுமே.
அப்போது அந்த ஊரைச் சேர்ந்த நான்கு நடுத்தர வயதினர் அவர்களின் பாதையை மறித்தனர். மதுவின் போதையில் இருந்த அந்த நால்வருக்கும், இந்த அந்நியர்களின் வருகை ஏனோ எரிச்சலைத் தந்தது.
“ஏலேய்… வடக்கிருந்து வந்த பரதேசிகளா! இங்க எதுக்குடா வர்றீங்க? நீங்க வர்றதுனால தான் எங்க ஊர்க்காரங்களுக்கு வேலையில்லாமப் போகுது. குறைந்த சம்பளத்துக்கு வேலை செஞ்சு எங்க வயித்துல அடிக்கவா வந்தீங்க?” என்று பேசியபடி அவர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள். அப்போது ஒரு பெரியவர் அவர்களை தடுத்திருக்கிறார்.
“ ஏன்டா தம்பிகளா! நீங்க எல்லாம் ஒழுங்கா வேலையப் பாத்துட்டு இருந்தா, ஏன் இந்தப் பயலுக அங்கிருந்து வர்றாங்க! இதுக்கு முன்னாடி எல்லாம் இப்படி வந்துகிட்டு இருந்தாங்களா இல்லையே! இப்ப நீங்க எல்லாம் சரியா வேலை பாக்குறது இல்ல! அப்படியே வேலை பார்த்தாலும் உங்களுக்கு சாயந்தரத்துக்கு மருந்து வாங்குவதற்கும் சேர்த்து கூலி கொடுக்கணும். இங்க விவசாயிங்க எல்லாம் என்ன கொள்ளை அடிச்சா வச்சிருக்காங்க? நீங்க ஒழுங்கா பொறுப்ப உணர்ந்து வயலுக்கு போய் பாடுபட்டு இருந்தா நீங்க ஏன் இப்படி நிதானம் இல்லாமல் இருக்கப் போறீங்க? நீங்களும் வேலை செய்யமாட்டீங்க! வேலை செய்ய வர்றவனையும் கெடுத்துக் குட்டிச்சுவர் பண்ணுவீங்க! அவங்க என்ன பாகிஸ்தான்ல இருந்தா வந்துருக்காங்க? அவங்களும் நம்ம நாட்டுக்காரங்க தானடா? எப்படியாவது போங்கடா?” இப்படி அந்தப் பெரியவர் சொன்னதை அவர்கள் சட்டை செய்யவில்லை.
பயந்துபோன அந்த வடநாட்டு இளைஞர்கள், தங்களுக்குத் தெரிந்த உடைந்த தமிழில், “ஐயா… எங்களை ஒருத்தர் இங்க வேலை இருக்குன்னு வரச் சொன்னார். அவர் பேர் தெரியல, ஆனா இந்த ஊர்தான்னு சொன்னாங்க…” என்று கெஞ்சினார்கள். ஆனால் அந்தப் போதை ஆசாமிகள் கேட்பதாக இல்லை.
வாக்குவாதம் முற்றியது. சட்டென்று ஒருவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுக்க, நிலைமை விபரீதமானது. அவளுடன் வந்த ஆண்கள் பதறிப்போய் தடுக்க முயன்றனர். “பெண்ணைத் தொடாதே!” என்று அவர்கள் கதறியது அந்த நால்வரின் காதுகளில் விழவில்லை. ஆத்திரம் கண்ணை மறைக்க, அந்த நான்கு பேரும் சேர்ந்து வட மாநில இளைஞர்களை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர்.
அடியைத் தாங்க முடியாமல் அவர்கள் சுருண்டு விழ, தற்காப்பற்ற அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த ஒரு தென்னந்தோப்பிற்குள் இழுத்துச் சென்றனர். அங்கே மதுவின் வெறியும், காமத்தின் விகாரமும் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்திக் கொண்டிருந்தது. அந்த நால்வரும், அந்தப் பெண்ணை மனிதநேயமற்ற முறையில் சித்திரவதை செய்து, கூட்டு வன்புணர்வு செய்திருக்கிறார்கள். மதுவின் வெறியில் அந்தப் பெண்ணின் உயிர் பிரியும்வரை அவர்கள் ஓயவில்லை. கடைசியில் அந்தப் பெண்ணின் உயிர் அடங்கிப்போன பின்னர் தான் அவர்களின் ஆட்டம் முடங்கிப்போனது.
அந்தப் பெண் தன் உயிரைக் காக்கப் போராடிய போராட்டத்தின் அடையாளங்கள்தான் அவள் உடலில் இருந்த அந்த நகக்கீரல்களும் காயங்களும். விஷயம் முற்றிவிட்டதை உணர்ந்த அவர்கள், வெளியே அடிபட்டுத் தவித்துக் கொண்டிருந்த அந்த இரண்டு ஆண்களையும் அடித்துக் கொன்று, தடயங்களை மறைக்க மூவரின் உடல்களையும் தூக்கி வந்து விடியற்காலையில் அந்த நாற்சந்தித் தெருமுனையில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
சட்டத்தின் கண்கள் உறங்கவில்லை. அந்தப் பகுதியில் கிடைத்த தடயங்களையும் தகவல்களையும் வைத்து தமிழகக் காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு சில மணி நேரங்களிலேயே அந்த நான்கு நடுத்தர வயதினர்களையும் கைது செய்திருந்தது. தவறு செய்தது அந்நியர்கள் அல்ல, என் மண்ணைச் சேர்ந்த ‘வீரம்’ பேசும் மனிதர்கள் என்பதுதான் பெரும் வலியாக இருந்தது
எங்கும் இருள் மெல்ல கவிழத் துவங்கும் இதமான வேளையில், நான் எனது அலுவலக வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது, அதே நாற்ச்சந்தியை மிதிவண்டியில் கடந்தேன். நான் காலையில் பார்த்த கூட்டம் இப்போது அங்கே இருக்கவில்லை. ஆனால் அந்த இடத்தின் வடு மனதின் ஓரத்தில் இன்னும் நிழலாடிக் கொண்டிருந்தது.
எனது மிதிவண்டி புது ஆற்றங்கரை பாலத்தை நெருங்கியது.
அப்போது எனக்கு முன்னால் ஒரு பெரியவர் தனது பழைய மிதிவண்டியை மெல்ல மிதித்தபடி சென்றுகொண்டிருந்தார். நான் காலையில் கேட்ட டி எம் சௌந்தரராஜனின், அதே பாடலை அந்தப் பெரியவ்ர் அழகாகப் பாடியபடி சென்று கொண்டிருந்தார். அந்த வரிகள் காற்றின் வழியே வந்து என் காதுகளை உரசிச் சென்றன. ஆனால் இப்போது என்னால் அந்தப் பாடலை ரசிக்க முடியவில்லை. அதனை ரசிக்கும் மனநிலை இப்போது என்னிடம் இல்லை.
அப்போது ஓர் இளம் பெண்ணின் ஆவேசமான கூக்குரலும், இரண்டு இளைஞர்களின் கதறலும் எனக்குப் பின்னே கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அந்த வட இந்திய பெண்ணும், இரண்டு இளைஞர்களும் என்னைத் துரத்திக்கொண்டு, வேகமாக என் பின்னே ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அப்படித்தான் எனக்குத் தோன்றியது. பயத்தில், எனது கால்கள் வழக்கத்தை விட வேகமாக மிதிவண்டியை மிதிக்க ஆரம்பித்தன.
000.
