காந்திபஜார் ஆரம்பிப்பது இரட்டைப் பிள்ளையார் கோவில் முன்பிருந்து. நகரத்தை இரண்டாக ஊடறுத்துச் சென்றது மதுரை கொல்லம் நெடுஞ்சாலை. அதற்கு இணையாக வடக்கு தெக்காக நீண்டு கிடக்கும் வணிக வீதி. நகரத்தின் வாயிலாக இரண்டு கண்மாய்கள். நாராயணப் பேரியும் கோவிந்தப் பேரியும். கடல் போல விரிந்து கிடக்கும் நீர் நிரவல்கள். பசுமை அலையடித்து கண்ணை நிறைக்கும் நன்செய் வயல்வெளிகள். தெற்கே நகரத்தின் முதல் வரவேற்பாக பேருந்து நிலையம். அகன்று விரிந்த புளியமரத்தை மையமாகக் கொண்டே பஸ்கள் சுற்றித் திரும்பின. பேருந்து நிலையத்தின் வாசலில் குதிரை வண்டிகள். கால்களை தரையில் உதைத்து சிணுங்கி, பசும்புற்களை சோம்பலோடு அசைபோட்டுக் காத்திருக்கும். அதைத்தாண்டியதும் காந்திபஜாரின் வணிக நிரை. நகைக்கடைகள், பலசரக்குக் கடைகள், பாத்திரக்கடைகள், பழக்கடைகள், ஜவுளிக்கடைகள், டெய்லர் கடைகள், போட்டோ ஸ்டூடியோ ஒன்று, மெடிக்கல்கள், பூக்கட்டும் கடைகள், மின்சார சாதனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்கும் கடைகள் என மொத்த வணிகமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் பரபரப்பான கடைத்தெரு.
தினமும் காலையில் நான் வேலைக்குச் செல்லும் வழியில் உள்ளது இரட்டை பிள்ளையார் கோவில். என் தெருவில் இருந்து வடக்கே திரும்பினால் அகஸ்தியர் கோவில் தெரு, அந்த தெரு முகப்பில் அம்மையப்பா தியேட்டருக்கான பட விளம்பரப் பதாகை. ஒரு கணம் நின்று ஏறிட்டுப் பார்த்து அன்று ஓடக் கூடிய படப் போஸ்டரை ஆசையோடு நினைவில் நிறுத்திக்கொள்வேன். ஐம்பதடி தாண்டினால் கண்ணா தியேட்டருக்கான விளம்பரப் பலகை. இரண்டு தியேட்டர்களிலும் போட்டி போட்டுக்கொண்டு சினிமாக்கள் பார்ப்பேன். அம்மையப்பாவில் எட்டரை மணிக் காட்சி நகருக்குள் பிரபலம். இரவிக்கைகள் நிறைந்து வழியும் கொங்கைகள் கொண்டிருக்கும் சுவரொட்டிகள். ஆங்கில முதல் எழுத்தைச் சுற்றி வட்டம் இட்டிருக்கும். வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தால் இப்ராஹிம் துணிக்கடை. அதையொட்டி வடக்கே அகன்று பூதலித்து நிற்கும் அரசமரத்தின் அடியில் பிள்ளையார் கோவில். இருவருக்கும் ஒரு வணக்கம் வைத்துவிட்டுத்தான் வேலைக்குப் போவது. நெற்றியில் தின்னாறு பூசி காது மடல்களில் அருகம் புல் கீற்றுகள் சொருகி, வெள்ளைப் பட்டைகள் உலர்ந்து உதிர வேண்டும் என் முகத்தில். காந்தி பஜாருக்குள் நுழைந்து பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டது. பதினைந்து ஆண்டுகளும் ஒரே ஜவுளிக்கடையில்தான் உத்தமப் பிழைப்பு. சங்கர நாராயண முதலியார் உருவாக்கி, அவருடைய பையன்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள் இரண்டு மாடிக் கடையை. கட்பீஸ் விற்கும் பிரிவில் பத்தாம் வகுப்பை பாதியில் விட்டு வந்ததும் போய்ச் சேர்ந்தேன். இருபது ரூபாய் தினக்கூலி. மூன்று ரூபாய் பேட்டா.காலை பத்துமணிக்கு உள்ளே போனால் வீடு திரும்புவது இரவு பத்துமணிக்கு. இடையே இரண்டு சாப்பாட்டு வேளைகள். பகலில் இரண்டுமணிக்கும் சாயந்திரம் ஏழுமணிக்கும்.
பத்தாம் வகுப்பு அரையாண்டுப் பரிட்சை முடிந்ததும் பள்ளியில் சிறிய கைகலப்பு. திட்டமிட்டு நிகழவில்லை. ரத்தினவேல் பாண்டியன் தலைமையாசிரியர். பள்ளியை நுாறு விழுக்காடு தேர்ச்சி உள்ளதாக ஆக்க வேண்டும் என்கிற பேராசை அவருக்கு. மாணவர்கள் பள்ளியில் இரவு முழுக்கத் தங்கிப் படிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பினார்.. நாடார் ஸ்கூலுக்கும் எங்கள் பள்ளிக்கும் கடுமையான போட்டி. பையன்கள் அத்தனைப்பேரும் இராப்படிக்க தவறாமல் வந்திருக்கிறார்கள். நானும் ரிபாயும் மட்டும் போகவில்லை. முன் அனுமதியும் பெறவில்லை. மறுநாள் காலையில் பிரேயர் நடக்கும்போதே என்னையும் ரிபாயையும் கிரவுண்டில் முட்டியில் நிறுத்தினார் ரத்தினவேல் பாண்டியன். அரைமணி நேரம் நான் மூட்டு வேதனையைச் சகித்துக்கொண்டேன். செம்பருத்தி செடிகளின் நிழலில் படுத்துக்கிடந்த செவலை நாய் அனுதாபம் கொண்டு என்னைப் பார்த்தது. பிரம்புடன் என் அருகே வந்தார் தலைமை ஆசிரியர்.
“ஏம்ல..நேத்து வர்ல” என்று கேட்டு உள்ளங்கையை முன்னே நீட்டச் சொன்னார்.
“வயித்து வலி சார்” என்றேன் பலகீனமாக.
“பொய்யால சொல்லுத..ஒழுங்கா படிக்காம பெயிலாப் போனா பன்னிதான் மேய்க்கணும்” என்று சொல்லியபடியே பிரம்பு நுனியினால் என் முகத்தை நிமித்தினார். கைகட்டிய நிலையில் இருந்த என்னை பிரம்பு நுனி கொண்டு கையை நீட்டச் சொல்லி நெம்பினார். நான் சுற்றிலும் பார்த்தேன். ஒட்டுமொத்த பள்ளியும் நடப்பதை ஒற்றறிந்து கொண்டிருந்தது. ஜன்னத்துல் பிரதவுஸ் எனக்கு எதிரே திண்டின் மறைவில் நின்றிருந்தாள்.
சட்டென்று எழுந்து வாசலை நோக்கி ஓடத் தொடங்கினேன். ரத்தினவேல் பாண்டியனும் சுதாரித்துக்கொண்டு என்னைத்துரத்தி வந்து வாசல் கேட்டை நான் நெருங்குவதற்குள், சட்டைக்காலரைப் பிடித்து இழுத்து நிறுத்தினார். வேகமாகத் திரும்பி அவரை இடது கை முட்டினால் ஒரு குத்து விட்டு கீழே தள்ளினேன். அவர் “ஆத்தாடி” என்று அலறி தரையில் மல்லாக்க விழுந்தார். சங்கரன்கோவிலில் பெரியம்மா வீட்டில் ஒரு வாரம் மறைந்து கிடந்தேன். அம்மா அழுது கெஞ்சிப் பார்த்தாள். நான் படிக்கவே மாட்டேன் என்று வீம்பு பிடித்தேன். அப்பா “வெட்டியா ஊர் சுத்த வேண்டாம்னு சொல்லு..நான் முதலியார்கிட்ட பேசிட்டேன்..கடைக்கு அனுப்பிவைக்கச் சொன்னாரு” என்றார். பள்ளி செல்லுதல் என்கிற வாதையில் இருந்து நிரந்தர விடுதலை.
அல்லல்கள் அற்ற அன்றாடம். என் வாழ்வில் நான் நிம்மதியாக இருந்த குறுங்காலம். பதினைந்து வயதில் இருந்து இருபத்தொன்று வயது வரை பெரிய நெருக்கடிகள் ஏதும் இல்லை. வீட்டில் காலையில் கடைசியாக எழுந்திருக்கும் ஆள் நான்தான். வடக்கு பார்த்த வாசல் கொண்ட வீடு. முதலில் கொல்லம் ஓடுகள் வேய்ந்த தார்சா, தார்சாவில் இரண்டு ஆட்கள் படுக்கும் தோதில் அகன்ற தேக்குமரக் கட்டில். அடுத்து கிழக்கே பார்த்து மட்டப்பா அறை. அதுதான் அப்பாவின் ஓய்வறை. அதை அடுத்து அடுப்படி. அம்மா புகைமண்டிய இருளுக்குள் பகல் முழுக்க இருமிக்கொண்டிருப்பாள். அம்மா வீட்டில் வைத்தே அப்பம், பனியாரம், கேசரி என்று தின்பண்டங்கள் தயாரித்து தெருவாசிகளுக்கு விற்பனை செய்தாள். தலைவரை போர்வையால் மூடி படுத்திருக்கும் என்னைத்தாண்டித்தான் தெருப்பையன்கள் பனியாரம் வாங்க அடுப்படிக்குச் சென்று வருவார்கள். எட்டுமணிக்கு மேல் எழுந்து சீசன் துண்டினை எடுத்து தோளில் போட்டபடி நாராயணப் பேரிக்கு நடந்து செல்வேன். காலையில் பெரும்பாலும் வீட்டில் சாப்பிடுவதில்லை. பிள்ளைவாள் ஓட்டலில் ரவை உப்புமாவும் , பொங்கலும் ஆவி பறக்க காத்திருக்கும். பஞ்சு போன்ற இட்லிகள் பதினைந்து திங்கலாம். நாள்தோறும் கிடைக்கும் பேட்டாக் காசினை காலை உணவிற்குப் பயன்படுத்திக்கொள்வேன்.
சங்கீதா ஓடிப்போன ஒரு மாதத்தில் எனக்கு சொரியாஸிஸ் வந்தது. முதுகில் தேமலைப் போல அதன் முதல்வருகை. முழுங்கை மூட்டுகள் இரண்டிலும் வேர்க்குருக்களைப் போன்று சிறிய கொப்புளங்களாகத் தோன்றி அரிப்பெடுத்தது. சொரிய சொரிய கண்களைக் கிறக்கும் சுகம். தோல்கள் உரிந்து படலங்கள் தோன்ற ஆரம்பித்தன. சொரிந்தால் செதில்கள் உதிர்ந்தன. தொடையிடுக்கு, ஆண்குறியின் நுனி, உள்ளங்கால்கள், முதுகின் விரிந்த மேல்பாகம், முன்நெற்றி என படைப்புண்கள் பரவின. நெற்றியில் ரோமங்களுக்கு இடையில் அவை கருத்த திண்டுகளைப் போல வீங்கித் தெரிந்தன. மண்டை முழுக்க செதில் ஊற்றுகள். அருவருப்பான தோல் சித்திரங்கள். நமைச்சல் தாங்க முடியாது. கை நகங்களால் பிராண்டிக்கொண்டே இருப்பேன். நொங்கு நோண்டுவதைப் போல சொரியாஸிஸ் புண்களை ஊன்றி பிய்ப்பேன். அட்சயப் பாத்திரமாக அவை மாறி, கிள்ளக் கிள்ள செதில்கள் வந்துகொண்டே இருந்தன.
ஆறா ரணத்துடன் அலைந்து திரிந்த நாட்கள். தாள முடியாத அவமானம். எல்லாருக்குமே என் ஆண்மையின்மீதே ஐயப்பாடுகள். இத்தனைக்கும் சங்கீதா பன்னிரெண்டு ஆண்டுகள் என்னுடன் இருந்திருக்கிறாள். குழந்தைப் பேறு இல்லாத போது கூட இப்படி அவமானப்பட்டதே இல்லை. உறவினர்களில் சிலர் பார்க்கும்போதெல்லாம் “என்னடே..ஏதும் விசேசம் உண்டா?” என்று கேட்டு மாயக் கரங்களால் என் விதைப்பைகளை ஆவேசம் கொண்டு கசக்கி விடுவார்கள். அதிலொரு சுகம். ஏகப்பட்ட மருத்துவ ஆலோசனைகள். நோயிக்கும் பாரு பேயிக்கும் பாரு என்கிற வழிகாட்டுதல்கள். குழந்தைகள் இன்றி ஒருவன் உயிர்வாழவே கூடாதா? சமூக மதிப்பீடுகள் சர்வாதிகாரமாக காட்சியளித்தது. திருமணம் செய், குழந்தைகள் பெறு, சொத்துசேர், பிள்ளைகளுக்கு வசதி வாய்ப்புகளை உண்டு பண்ணு, ஊரே பொறாமைப்படும்படி அவர்களை சொத்துள்ள குடும்பங்களில் திருமணம் செய்து கொடு. கடைசியில் நோய் நொடி இல்லாமல், படுக்கையில் கிடந்து நொம்பலப்படாமல் செத்துப்போ. இவைதான் அனைவருக்குமான உலக நீதி. உன்னதமான வாழ்க்கைப் படிநிலைகள். அடிப்படை நியதிகள். அவற்றை அடைவதற்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம். திருடலாம், கொள்ளையடிக்கலாம். உடன் பிறப்புகளை ஏமாற்றலாம். மனைவியைக் கூட்டிக்கொடுக்கலாம், அரசியல் இடைத்தரகராக குற்றேவல் புரிந்து பொதுநலங்களுக்கு பெருந்தீங்கு இழைக்கலாம். உண்ணும் சோற்றில் மண் அள்ளிப் போடலாம், அருந்தும் குடிநீரில் சாக்கடையை கலக்கலாம். எல்லாவகையான மதிப்பீடுகளும் மீறப்படலாம். அனைத்து அறங்களும் புறக்கணிக்கப்படலாம்.
நோய் முற்றிய நிலை. மேலும் தீவிரம் அடைந்தால் வெளியே தலைகாட்ட முடியாமல் ஆகிவிடும். வண்ணார்பேட்டையில் தோல் டாக்டர் மதுசூதனனைப் பார்க்கப் போனேன். மூன்று மணி நேரப் பயணம். பஸ்சில் பக்கத்தில் உட்காரவே தயங்கினார்கள். கூனிக்குறுகி சன்னோலரத்தில் ஒண்டி அமர்ந்தேன். டவுணுக்குள் இறங்கியதும் ஒருவித ஆசுவாசம். யாருக்கும் என்னைத் தெரியப்போவதில்லை. இன்னார் என்ற அடையாளம் கரைந்து நானும் சாமானியர்களில் ஒருவன்தான். என் நோய் அவர்களை திடுக்கிடச் செய்யலாம். ஆனால் சங்கீதா உண்டாக்கிய அவமானத்தை இங்கே யாரும் என் முன்னால் துாக்கியெறிய வாய்ப்பே இல்லை. வெய்யில் நுரைத்துக்கிடந்த மூத்திரச் சந்து. மாடியில் கிளினிக் என்றார்கள். தரையில் வெதர்வீக்கம், குடல்வால்வு, ஆண்மைக்குறைவிற்கு யுனானி முறையில் சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரி. உடலை ஆடைகள் மறைத்தன என்பதால் கவலையில்லை. ஆனால் முன் நெற்றியை, கை விரல்களை, பாத விளிம்பு இடுக்குப் பகுதிகளை என்ன செய்வது?
முப்பது நாட்களுக்குள் சகல நெருக்கடிகளையும் பார்த்திருந்தேன். காவல் நிலையம் சென்று வந்ததுதான் அதிகபட்ச அவமானம். ஏட்டையா “பொட்டைச்சிய அடக்கி வைக்கத் தெரியாம ஊர் மேய விட்டுட்டு இங்க வந்து நின்னா எப்பிடி? ரெயில்வே கேட் ஒழுங்கா துாக்குமால உனக்கு? நாக்கு இருக்குலாடா..நாக்கு…நல்லா..இத்தாந்தண்டி…நீளமா…இருக்கே..அதை திங்க மட்டுந்தான் பயன்படுத்தினியால..” என்றார் காலிடுக்கை நீவிக்கொண்டே. மரப்பெஞ்சில் நெருக்கியடித்து அமர்ந்திருந்தவர்கள் குனிந்தவாறு குலுங்கிச் சிரித்தார்கள்.
படுத்தால் துாக்கம் வருவதில்லை. மகள்கள் இருவரையும் தங்கையிடம் ஒப்படைத்திருந்தேன். சங்கீதாவைத் தேடி அலையாத ஊரில்லை. திருவனந்தபுரம், கொல்லம், குருவாயூர் என்று சுற்றித் திரிந்தேன். செங்கோட்டையில் ஒரு லாட்ஜில் அவள் சாடையில் ஒருத்தியைப் பார்த்ததாக சரவணன் அண்ணன் சொன்னபோது வயிற்றைக் கலக்கி கழிவறைக்கு ஓடினேன். மண்டை முழுக்க சங்கீதா. மனம் சங்கீதாவை பலநுாறு விதங்களில் தண்டிக்கும் பகற்கனவுகளில் திளைத்தது. தேடிப்பிடித்து தலையை மட்டும் வெட்டிக்கொண்டு வந்து வீட்டுவாசல்படியில் வைக்க வேண்டும். நடுத்தெருவில் நின்று “இதோ பாருங்கள் இந்த நாயை..ஓடுகாலி நாய் நம்பிக்கைத் துரோகம் செய்த பாவத்திற்கு நான் வழங்கியுள்ள தண்டனையை” என்று கத்த வேண்டும். சாதாரணமாகவே பற்கள் நெரிபட, வெஞ்சினத்தில் வீங்கும் முகத் தோற்றம் கொண்டிருந்தேன்.
இருபத்தொரு வயது சுந்தர் எதிர்வீட்டிற்கு குடி வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. அக்கா..அக்கா..என்று என் வீட்டிலேயே பலியாகக் கிடப்பான். மார்பு நிறைய சுருள் ரோமங்கள்.அவை தொடைகளில் அட்டைப்பூச்சிகளைப் போல அப்பிக்கிடந்தன. பிள்ளைகள் அவனை மாமா என்று அழைத்தபோது சங்கடம் ஏதும் இருக்கவில்லை. இருபத்தொரு வயது விடலையின் உடல் சூடு. தீராத வேட்கை.
பன்னிரெண்டு வருடத் தாம்பத்ய நினைவுகள் கண் முன்னால் தோன்றி மறைந்தன. மின்னல் போல நிகழ்ந்து முடிந்த முதலிரவு. ரோமங்களை நீக்கி உரித்த கோழியின் உடலைப் போன்ற ஒளிர்வு. திரை கிழிந்து இரத்தம் கசியவில்லை. மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. ஆரம்ப நாள்களில் வலித்தது. தேங்காய் எண்ணெயும் கிரீமும் வலியைக் குறைத்தன. ஆடுகளம் பிடிபடவே ஒரு வாரம் ஆயிற்று. மேடு பள்ளங்கள் அற்ற உடல். இருளுக்குள் கரையும் உடலின் நிறம். தலையில் சூடிய மல்லிகையும் பிச்சியும் இழுத்து அணைத்தது. கையாளுவதற்கு மிக எளிதான ஒரு கருவியைப் போன்ற மெல்லுடல். எந்த ஒரு இரவிலும் அவளிடம் அதிருப்திக்கான அறிகுறியை நான் கண்டதே இல்லை. ஆரம்ப நாட்களில் அவளிடம் ஒருவகையான உற்சாகம் தென்பட்டது. “ரெம்பச் சின்னதால்லா இருக்கு?” என்றாள் ஒருநாள் இரவில். “அநேகத்த பாத்திருக்கியோ?” என்றேன் யோசிக்காமல். இரண்டு நாட்கள் அழுது தீர்த்தாள். பகலில் சமையல்கட்டில் நின்று அவளை பின்பக்கமாக அணைத்து கழுத்தில் முகர்ந்து நின்ற போது “இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை..” என்று விரக்தி தொனிக்கும் விதத்தில் முகத்தைச் சுழித்தாள். ஆறு மாதங்களில் அவள் உற்சாகம் படிப்படியாகக் குறைந்து போயிற்று.
சங்கீதா ஓடிப்போன அன்றிரவு முழுக்க செல்வியை மடியில் கிடத்தி அழுதுகொண்டே இருந்தேன். சின்னவள் ஜோதி “அப்பா..அம்மா..ங்கா..ங்கா..வேணும்” என்று இடைவிடாமல் சிணுங்கினாள். பாதி இரவில் பதறி எழுந்து யாரோ அடித்தைப் போல அலறினாள். விடாமல் அழும் குழந்தையை என்ன சொல்லி ஆற்றுப்படுத்துவது? சங்கீதா என்றால் ஒருச்சாய்ந்து படுத்து மார்புக்காம்புகளில் ஒன்றினை சப்பக் கொடுப்பாள். சிறிய முலைகள். உள்ளங்கைக்குள் அடங்கக் கூடியவை. நெஞ்சு நிறைந்து இருப்பவர்களைப் பார்க்க ஏக்கமாக இருக்கும். என் பிள்ளைகள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். உறிஞ்சும் சப்தம் ஓய்ந்து புன்னகை ததும்பும் குவிந்த உதடுகளோடு சின்னவள் உறங்கிப் போவாள். இரண்டு குழந்தைகளையும் சங்கீதா இல்லாமல் எப்படி வளர்க்கப் போகிறேன். சதா என்னை மிரட்டிய கேள்வி. என்ன யோசித்தாலும் பதிலே கிடைக்கவில்லை. அவளை எங்கிருந்தாலும் கூட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும். “என் பிள்ளைகளுக்காக உன்னை மன்னிக்கிறேன்… வா..வந்து வாழு சனியனே..“
தலையைக் குனிந்து கொண்டே சென்றேன். யாரையும் நிமிர்ந்து பார்க்கும் தெம்பு இல்லாமல் போயிருந்தது. தெரு நாயைக் கண்டதும் தோன்றும் ஒருவித அச்சத்தைப் போல. மனிதர்களைக் கண்டாலே உடல் நடுக்கம். கற்பனைப் பயம். முதுகுக்குப்பின்னால் யாராவது காறித்துப்பினால் சிறிய திடுக்கிடல். நின்று ஒரு கணம் திரும்பிப் பார்ப்பேன். தொலைவில் யாரேனும் ஆர்ப்பாட்டம் செய்து சிரித்தால் என் நடையின் வேகம் அதிகரிக்கும். அங்கிருந்து விரைந்து அகன்றுவிடத் தோன்றும். காணும் ஒவ்வொன்றில் இருந்தும் சங்கீதாவினால் உண்டான அவமானம் எழுந்து வந்துகொண்டே இருந்தது.
திருநெல்வேலியின் இரண்டு மணி வெக்கை முதுகிலும் தலையிலும் வியர்வைத் துளிகளாக வடிந்தது. கிளினிக்கில் ஆளே இல்லை. டாக்டர் மதுசூதனன் வாராந்திரி ஒன்றை டேபிள் மீது விரித்து வைத்து குனிந்திருந்தார்.
ஆடைகளை நீக்கி உடல் முழுக்க பரிசோதித்தார். நான் என்ன வேலை செய்கிறேன். திருமணம் ஆயிற்றா? குழந்தைகள் எத்தனை? போன்ற அடிப்படை விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஒரு மருத்துவர் இத்தனை அக்கறையோடு விரிவாக பேசுவதை அங்கேதான் கண்டேன்.
“பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல..இது ஒருவகையான தோல் நோய்தான்..சொரியாஸிஸ்னு பேரு…முழுக்க குணப்படுத்த முடியாது..இதுவரைக்கும் மருந்தே கண்டு பிடிக்கல…”
நான் பீதி உறைந்த கண்களில் டாக்டர் மதுசூதனனைப் பார்த்தேன்.
“எதனால வந்தது டாக்டர்?”
“சரியான காரணத்தை சொல்ல முடியாது. பெரும்பாலும் மரபணுவில இந்த நோய்க்கான காரணம் இருக்கலாம். பரம்பரை பரம்பரையா வரக்கூடியது. உங்க முன்னோர்கள் யாருக்காவது இருந்திருக்கலாம். இது ஒருவகையான அலர்ஜிதான். கவலை, மன நெருக்கடி, உறக்கம் இல்லாமத் தவிக்கிறது..இதெல்லாம் இந்நோய் வர்றதுக்கான காரணங்கள்”
“வராம தடுக்க முடியுமா டாக்டர்?“
“உறுதியா சொல்ல முடியாது. இப்ப வெயில் காலம். குளிர்காலம் வந்தா தானா போயிரலாம். அடுத்த வெயில் காலத்தில வந்தாலும் வரலாம். சோப்பும், ஷேம்பும் எழுதித்தாரேன். ஆயிண்ட் மெண்ட் அப்ளை பண்ணனும். உடனே போயிராது. ஒட்டுவாரொட்டி கிடையாது. மருந்து பாதிதான். மன நிம்மதிதான் நோய்க்கு மீதி மருந்து..எதுக்கும் மனசைப் போட்டு கஷ்டப்படுத்தக் கூடாது..ரிலாக்சா இருக்கணும்”
நுாறு மில்லி மருந்து ஆயிரத்தெட்டு ரூபாய். கையில் காசே இல்லை. சங்கீதா அவள் கொண்டு வந்திருந்த பத்துபவுன் நகைகளையும் எடுத்துக்கொண்டுதான் ஓடிப்போனாள். ஐந்து வட்டிக்கு பலவேசம் அண்ணனிடம் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ஒரு லட்ச ரூபாயை கடன் வாங்கினேன். ஆறு மாதங்கள் ஜவுளிக்கடைக்குப் போகவில்லை. காந்திபஜாரில் அத்தனைப் பேருக்கும் தெரிந்திருக்கும். முதலாளி வீட்டுக்கு ஒருமுறை தேடி வந்திருந்தார்.
“சரி..விடுடே..ஊர் உலகத்தில நடக்காததா நடந்திருச்சி…சவத்தை மறந்து தொல..நாளையில இருந்து கடைக்கு வாடே..ரெண்டு பொட்டப்புள்ளக வேறு இருக்குலா”
“என் பிள்ளைகள்..என் பிள்ளைகள்“ என்று அரற்றிக்கொண்டே இருந்தேன்.