க.சுப்பிரமணியன் பக்கங்கள் -நுால் அறிமுகம் -2. அஜிதனுக்கான சவால்

ஆறு சிறுகதைகளும் இரண்டு குறுநாவல்களும் அடங்கிய தொகுப்பாக தனது மூன்றாவது புத்தகமான மருபூமியைக் கொண்டுவந்திருக்கிறார். விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியீடு.
ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் சிறுகதை முதல் முடியாட்டம் சிறுகதை வரை கிட்டத்தட்ட அனைத்துச் சிறுகதைகளிலுமே கதைக்களம், கதைப் போக்கு, கதைமாந்தர்களின் வார்ப்பில் ஜெயமோகனின் பாணி தென்படுகிறது. சில கதைகளில் எழுத்து நடையையும்கூட சொல்லிவிடலாம்.
நிலைவிழி, வழித்துணை, ஒரு குழந்தையிறப்புப் பாடல், முடியாட்டம் கதைகளை, எழுதியவர் பெயர் மறைத்துக்கொடுத்தால் பலரும் அதனை ஜெயமோகன் கதைகள் என சொல்வதற்கான வாய்ப்பதிகம். அதிலிருந்து ஓரளவு விலக்கமாக இருப்பது போர்க் ரோஸ்ட் சிறுகதைதான். போர்க் ரோஸ்ட் செய்து சாப்பிட்டு, பாட்டிக்கும் எடுத்துக்கொண்டு கிளம்பும் வடிவின் பேரனிடம், ஜோஸின் பாட்டி இடையிட்டுப் பேசும் பேச்சும், அதில் ஒரு முடிச்சு வெளிப்படுவதும் ஜெயமோகனை நினைவூட்டுகிறது.
இரண்டு குறுநாவல்களில் முதல் குறுநாவலான ஆயிரத்து முந்நூற்று பதினான்கு கப்பல்கள், தன் தாய் தந்தையுடன் பத்மநாபபுரத்தில் வசித்த காலகட்டத்திய இளமைப் பருவ நினைவுகளை அஜிதன் மீண்டும் அடுக்கி எழுதிப் பார்க்கும் கதையாக மலர்ந்திருக்கிறது. படிக்கக் கிடைத்த பிறரின் டைரிக்குறிப்பு போல, கதை சுவாரசியமாக இருக்கிறது. தங்கை சைதன்யாவோடான நினைவுகள் இடம்பெறும் பகுதி, ஊடலுக்குப் பின்பு அண்ணன் மீதான அவளது விலக்கம், குட்டனுடான சிநேகம், பக்கத்து வீட்டு அக்காவான நிஷாவை அழகுக்கான அளவுகோலாக சில காலம் வைத்திருந்ததது போன்று சிறு நிகழ்வுகளின் வரிசைகள் வாசக ஈர்ப்பை மங்கவிடாமல் பார்த்துக்கொள்கின்றன.
வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்றுடன் நாம் பிணைத்தும் அறுத்தும் இந்தப் பூமி, மனிதர்களுடனான நம் உறவை உருவாக்கிக்கொள்கிறோம். அப்படி உருவாக்கிய சில பிணைப்பும் அவற்றின் மீதான உணர்வுரீதியான நெருக்கம் எப்படி அறுபடுகிறது என்பதும் பற்றிய கதையாகவும் படுகிறது.
மற்றொரு குறுநாவலான மருபூமி, வைக்கம் முகம்மது பஷீர் பற்றியது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி, அதனைத் தாண்டி ஆசியா, ஆப்பிரிக்கா என சில ஆண்டுகள் பயணித்தவர் பஷீர். இந்தப் பின்புலத்தை எடுத்துக்கொண்டு, அரபு தேசத்தின் பெரும் பாலைநிலம் வழியாக பஷீர் பயணித்து அதைக் கடப்பதை தன் நாவலின் கருப்பொருளாயிருக்கிறார்.
ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையின் குறிப்பிட்ட ஒரு நிகழ்வை எடுத்துக்கொண்டு புனைவதற்கான நல்ல கதைக்களத்தை அமைத்துத் தந்துவிடும். ஆனால், வாசிப்பவரின் மனதில் பஷீரை உயிரூட்டி அவரை பாலை நிலத்தில் வெளியில் அலையவிடுவது மாபெரும் எழுத்துச் சவால். அஜிதன், அந்தச் சவாலில் முழுமையாக வெற்றியடையாததுபோல்தான் நான் உணர்கிறேன்.
ஒரு நாடோடி பாலைவனத்தைப் போராடிக் கடப்பதும், அதன்வழியாக சேகரமாகும் அவன் அனுபவங்களும் மனஉறுதியும்தான் கதைக் கரு. பஷீரின் வழக்கமான நடைப் பிரயோகங்களும், அவரது அம்மா தினமும் இரவு பஷீர் வருவதற்காக உணவை எடுத்துவைத்து காத்திருந்தார் என்பதும் இடம்பெற்றிருந்தாலும் கூட, நாவலில் பயணிக்கும் நபர் பஷீர் என்பதாக என் ஆழ்மனம் கடைசி வரை நம்பவே இல்லை. இன்னும் கச்சிதமான மொழிநடையும் சித்தரிப்பும் தேவையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
மாறாக, சிறுகதைகளில் வழித்துணை, ஒரு குழந்தையிறப்புப் பாடல், முடியாட்டம் மூன்றும் சிறப்பாக கதைகளாக உருவாகியிருக்கின்றன. முன்பே சொன்னதுபோல இந்த மூன்று கதைகளையும் யாரவது அனுப்பிவைத்து அவை ஜெயமோகனின் கதைகள் என்று சொன்னால்கூட நம்பியிருப்பேன்.
தந்தையின் மரபு வழியாகவோ, இயற்கையான பயிற்சியிலோ கதை, யுக்தி, நடை அஜிதனுக்கு கைவந்திருந்தாலும், ‘இது அஜிதனின் கதைக்களம் அல்லவா!’ என்று சிந்திக்கக்கூடிய புதிய களங்களைக் கண்டடையவேண்டியதுதான் இப்போது அவருக்கு முன்பிருக்கக்கூடிய சவால் என நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *