நிலையழிதல்

“இரண்டு வழி இருக்கு, ஒன்னு நரகம், இன்னொன்று சொர்க்கம்,  நம் நோக்கமும் செய்லபாடும்தான் நம் வழியை தீர்மானிக்குது,  இறைவனை உதறினால் நரகம், அவனை நம்பினால், அவன் சொல்படி நடந்தால் சொர்க்கம்…. “

நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருந்ததால் உடல் அசவுகர்யம் கொள்ள ஆரம்பித்திருந்தது,  கால்களை மாற்றியபடி அசவுகர்யத்தை வெளிக்காட்டாதபடி அமர்ந்திருந்தேன்,  என்னை சுற்றி 300 பேருக்கு மேல் அமர்ந்திருக்கிறோம்,  மேடையில் எம் மதவழிகாட்டி பேசி கொண்டிருக்கிறார்,  நினைவு தெரிந்த நாள் முதல் இந்த பிரசங்கங்களை கேட்டு கொண்டிருக்கிறேன்,  அம்மா, அப்பா, அப்பாவின் நண்பர்கள்,  சுற்றி இருக்கும் பெரியவர்கள் எல்லோருமே இந்த பிரசங்கங்களைதான் தங்கள் அறிவுரைகளாக அளித்தார்கள்,  எங்கள் எல்லோரையும், அல்லது எங்களில் யாரையேனும் தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் இந்த முழு பிரசங்கங்களையும் எந்த தங்கு தடையுமின்றி சரளமாக ஒப்பிப்பார்கள்,  அந்த அளவு இதை கேட்டிருக்கிறோம்,  இது எங்களை சுற்றி அரணாக இருந்து கொண்டிருக்கிறது.

வழிகாட்டி சொற்பொழிவை முடிப்பது போல தெரியவில்லை, எப்போதும் அரை மணிநேரத்திற்குள் முடித்து விடுபவர் இன்று நேரத்தை மறந்து பேசிக்கொண்டிருக்கிறார்,  கேட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரிலும் அசவுகர்யம் முளைத்து கொண்டிருப்பதை அவர்கள் உடல் அசைவுகள் வழியாக உணர முடிந்தது,  மெல்ல என் மனம் நிம்மதி கொள்வதை உணர்ந்தேன்,  நானும் மற்றவர்கள் போல என உணர்ந்து,  எல்லோருக்குள்ளும் உருவான அசவுகர்யம்தான் எனக்குள்ளும் உருவானது என்று.

கதிர்தான் முதலில் என்னை குழப்பி விட்டது,  “நீ கடவுளை உணர்ந்திருக்கிறாயா” என்றான் ஒருநாள்,  எந்த சந்தேகமும் துளிகூட இல்லாது முழுதாக இருப்பதாக எண்ணி தினமும் பேசிக்கொண்டிருந்த ஒருவரை, அவர் உண்மையில் இருக்கிறாரா என்று கேட்டு விட்டான், இதுவரை அவர் கேட்டுக்கொண்டிருப்பதாக நான் எண்ணி பேசி கொண்டிருந்தேன், என் ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும் அவர் அறிவார் என நினைத்தேன்,  ஆனால் அவர் அப்படி கேட்கிறார்,  அறிகிறார் என்பதை இதுவரை சோதித்து பார்த்ததே இல்லை,  கதிர் சொன்னதிலிருந்து உண்மையில் அந்த பக்கம் நான் பேசுவதை கேட்க அவர் இருப்பதாக நான் எண்ணிக்கொள்வது எல்லாம் என் பிரமை மட்டுமே என்ற எண்ணம் வலுவாக வந்து விட்டது, போதா குறைக்கு என் வேண்டுதல்கள் எதுவுமே இந்த குழப்ப நாட்களில் பலிக்க வில்லை,  சுவரிடம் பேசினாலும் அது கேட்காது என்று தெரிந்தாலும் சுவர் என்ற ஒன்றாவது நம் கண்முன்னே இருந்து கொண்டிருக்கிறது, ஆனால் கடவுளிடம் பேசுவது,  அல்லது அவர்  இருப்பதை எந்த வழியிலாவது உணர்வது என்பதை இந்நாட்களில் எனக்கு சாத்திய படவே இல்லை.

கதிர் கடவுள் இருப்பதை ஏற்காதவன், இந்த ஏற்பின்மையை மற்றவர்களிடம் பேசி பற்ற வைப்பவன்,  உண்மையில் அவனும் நிம்மதி அற்றவன், அடுத்தவன் நிம்மதியையும் கெடுப்பவன்,  இப்போது என் நிம்மதியை கிட்டத்தட்ட முழுமையாக கெடுத்து வைத்து விட்டிருந்தான். இனி அவனிடம் பேசவே கூடாது, அவன்  இருந்தாலே அகன்று சென்று விட வேண்டும் என்றெண்ணி கொண்டேன். ஆனால் இப்படி வேண்டாத விருப்பங்கள் எல்லாம் எனக்கு உடனே நடந்து விடும், அதும் பாதாளத்தில் இருந்து தோண்டி எடுப்பதை போல என் வீட்டிற்கே வந்தான் அன்று.

கொஞ்சம் கதிகலங்கி விட்டேன் அவனை பார்த்து,  ஆனால் ஏதென்று அறியாத ஒரு ஆவல் மனமுள்ளுக்குள் புரண்டு கொண்டிருந்ததையும் மறைக்காமல் ஒப்பு கொள்கிறேன். அம்மா அவனுக்கு டீ எடுத்து வந்தாள், எனக்கும். கொஞ்சம் பிஸ்கெட்களும் மிச்சரும் ஒரு தட்டில் எடுத்து வந்து அதை  ஸ்டூலை நகர்த்தி  அதன் மீது வைத்து சென்றாள், கதிர் ஆர்வமாக எடுத்து சாப்பிட்டான். நான் மெல்ல ” என்ன இந்த பக்கம்,  அதிசயமா இருக்கே ” என்று சொல்லி புன்னகைத்தேன். கேட்டு கதிர் முகமும் புன்னகை கொண்டது ” உன்னுள்ள சாத்தான் கேறியிருக்காதா சொன்னாங்க, அதுதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன் ” என்றான். சிறிதுநேரம் இருவரும் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தோம்,  கதிர் மிச்சரின் கடைசி பருக்கை வரை எடுத்து முழுதாக தின்று முடித்தான்.

” டே நான் இறைவனுக்கு எதிரான ஆள் எல்லாம் இல்ல,  அப்படி ஒரு ஆள் இருந்தா ” என்று சொல்லி சிரித்தான்,

” டே எனக்கு எது நேர்வழினு உள்ளூர தெரியும், எல்லோருக்குமே தெரியும்னு நினைக்கிறேன்,  எது தப்பு, எது சரி னு எல்லாருக்கும் தெரியும், ஆனா மனசை கட்டுப்படுத்த தெரியாது, அல்லது மனசு சொல்றதை கேட்பான்,  எனக்கு என் மனசு தப்பான வழியை நாடாது,  தப்பு அதுனு உரக்க சொல்லும், தப்பி பார்வை திரும்பினா கூட அதை அதுவே வெட்டி முறிக்கும், இந்த  மனசு உள்ளவனுக்கு கடவுளோ பூதமோ தேவையில்லை,  ஆனா  யாரும் தன்னை பார்க்கலைனு உணர்தானோ அப்ப மனசை அவுத்து விடவனுக்கு கடவுள் வேணும், அதைவிட அவனை  பயமுறுத்த சாத்தான் வேணும் ” என சொல்லி எனை நோக்கி கதிர் சிரித்தான். நான் கொஞ்சம் வெலவெலத்து போனேன், நான் செய்த எந்த பிழை, அல்லது பிழை என பொதுப்பார்வையில் தெரிவதை இவன் கண்டுகொண்டிருப்பான் என எண்ணி  கணப்பொழுது நடுங்கினேன், பின் சுதாகரித்து அவனிடம் ” நல்ல உளறல் ” என்று சொல்லி சிரித்தேன்.

கதிர் ” கடவுளை விட்டுடலாம், கிழவன் போயிட்டு போறான்,  உன்னோட பக்தி உன்னை ஒரு கேள்வி கேட்காத அடியாள் ஆக்குதுனாவது உணர்த்திருக்கியா ” என்றான். இது என்ன புதிதாக குழப்புகிறான் என்று எனக்கு தோன்றியது.  ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்தேன்.

” நம்மளை யோசிக்க விட மாட்டாங்க,  எது சரி எது தவறு னெல்லாம் அவங்க முடிவு பண்ணி சொல்வாங்க, அதை நாம கேட்கணும், நம்ம எதிரி யாரு நண்பன் யாரு னு கூட முடிவு அவங்கதான் எடுப்பாங்க ” என்றான்.

இந்த கோணத்தில் நான் யோசித்ததில்லை,  ஆனால் அவன் சொன்னது உண்மை என்றுணர்ந்தேன்.

“நல்வழி காட்டும் அறிவுரை வரை சரிடா, ஆனா அதை தாண்டி நம்ம விருப்பத்தை,  விலகலை நம்ம சுய அனுபவம்தான் தீர்மானிக்கனும் ,  அதை வாழ்ந்து கண்டடைய்யறதுதான் வாழ்க்கை, எதையும்  நாமதான் தீர்மானிக்கனும்  “

கதிர் பேசுவது எல்லாம் சரி என்று தோன்றினாலும் ஆழத்தில் பிழை என்றும் தோன்றி கொண்டிருந்தது. பிறகு அவனுக்கு நான் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

” கதிர்,  எனக்கு கடவுள் பிடிக்கும், இந்த வாழ்க்கை, அம்மா, என்னோட சவுகர்யங்கள் எல்லாம் கடவுள் எனக்களித்ததாதான் நினைக்கிறேன், என்னை வழிநடத்தறதாவும், நல்வழியில் கொண்டு செல்வதாகவும்தான் நினைக்கிறேன்,  நீ சொல்றது போல நான் இன்னும் கடவுளோட இருப்பை இன்னும் அனுபவமாக உணரல,  ஆனா எனக்கு வரும் ஒவ்வொரு உதவிலும், ஒவ்வொரு திருப்பமும், ஒவ்வொரு வாய்ப்பும் அவர் உருவாக்கி தருவதாதான் நினைக்கிறேன் ” என்றேன்,  கதிர் ஏதும் சொல்லாமல் என்னைநோக்கி ” மேலே பேசு” என்று சொல்வதை போல பார்த்தான்.

” கதிர் நேத்து மாமா வந்திருந்தார், அவர் ஒரு சம்பவம் சொன்னார்,  அம்மா பத்தி, அம்மாக்கு அப்ப கல்யாணம் ஆகல,  மாமாவுக்கும்,  மாமா அம்மாவோட ஒரே அண்ணன், அன்னைக்கி அவர்  நடுராத்திரில தூக்கம் பிடிக்காம எழுந்து பின்வாசல் பக்கம் வந்து உட்கார்ந்து இருக்கார், அப்ப இருட்டுல கிணத்து பக்கம் ஒரு  அசைவு தெரியுது,  சட்டுனு புரிஞ்சு சுதாகரிச்சு  ஓடினார், அம்மா கிணத்துல விழந்து சாக போயிருக்காங்க,  மாமா பிடிச்சு நிறுத்தி இருக்கார்,  ஏதோ சோகத்துல அம்மா அப்படி முயன்றிருக்காங்க.”

” இப்பவரை அம்மா என்கிட்ட அதை சொன்னதில்லை,  மாமா அம்மா இல்லாத போது நேத்து எதேச்சையா  இதை சொன்னார்,  கூடவே இன்னொன்னும் சொன்னார், அவருக்கு பாதியில்  தூக்கத்தில் எழும் பழக்கமே இல்லையாம்,  அன்னைக்கி அதிசயமா  பாதியில் தூக்கம் கேட்டு பிறகு  தூக்கம் வராம புரண்டு படுத்து எல்லாம் பார்த்து முடியாம எழுந்து வந்து பின்வாசல்ல உட்கார்திருக்கார், அப்பத்தான் அம்மாவை கிணத்துப்பக்கம் பார்த்திருக்காங்க,  இப்ப உன்கிட்ட பேசும்பொது அதுதான் யோசிச்சுட்டு இருந்தேன்,  ஏன் அன்னைக்கு மாமாக்கு தூக்கம் போகணும், அங்க வந்து உட்காரனும்,  கடவுளோட அருள் இல்லாம இது வேறென்ன ” நான் சொல்லி முடித்தேன்,   சொல்லி முடித்த போது நானே உணர்ச்சிமயமாகி கண்கள் கலங்கி இருந்தேன்,  கதிர் என் உணர்வுகளை மதித்தான் என்பதை அவன் என்னை நோக்கும் பார்வை வழியாக உணர்ந்தேன்.

பிறகு கதிர் ” இதை நாங்க தற்செயல்னு சொல்லுவோம் ” என்று சொன்னான் அப்போது அவனிடம்  சட்டென ஒரு சிரிப்பு  தோன்றியது.

நான் ” போடா லூசு ” என்றேன், சொல்லும்போதே எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது, மேலும் நான் ” உன்னோட பிரச்னை,  நீ கடவுள் ஒரு சக்தி இல்லைனு முடிவு பண்ணிட்ட,  பிறகு இந்த முடிவுக்கான காரணங்களை மட்டும் தேடற ”  என்றேன்.

” தாதுவருட பஞ்சம்னு கேள்வி பட்டுருக்கையா, முன்னாடி இந்த மண்ணுல நடந்தது,  லட்சக்கணக்கான  ஆட்கள் செத்தாங்க, உணவில்லாம,  அவங்க சாமிட்ட வேண்டாததா நீயோ, இப்ப இருக்கறவங்களோ வேண்டிட்டீங்க,  அவங்களுக்கு ஏன் உன் கடவுள் கருணை காட்டல, அப்ப என்ன அவரு கோமா ஸ்டேஜுக்கு போயிட்டாரா ” என்றான்.

நான் கொஞ்சம் கொழம்பிவிட்டேன்,  பிறகு ” அவங்க எல்லாம் ஏதாவது பாவம் பண்ணி இருப்பாங்க என்றேன், சொல்லும்போதே நான் சொல்வது உளறல் என்றெனக்கு தோன்றியது.

” போடா லூசுக்கூதி ” என்றான்,  அதை கேட்கவும் என் எண்ணத்திற்கு சிறந்த பரிசு என்று எண்ணி புன்னகையுடன் அதை மானசீகமாக பெற்று கொண்டேன்!

” டே,  நான் ஒன்னும் முழுதா கடவுள் இல்லைனா, அப்படியான சக்தி ஒன்னு இல்லவே இல்லைனா நினைக்கல,  இருக்கலாம், என்னால இன்னும் அனுபவபூர்வமாக உணர்ந்து, உண்மையான விஷயம் இது என்று அறிந்து ஏற்று கொள்ள முடியல, அப்படியான அனுபவம் இன்னும் எனக்கு வாய்க்கல,  அப்படி உணரும்போது மாறுவனோ என்னவோ,  ” என்று சொல்லி முடித்து கொஞ்ச நேரம் இடைவெளி விட்டு பிறகு  “ஆனா உன் மாமா சொன்னது போல வேறு சில சம்பவங்களும் கேள்வி பட்டிருக்கேன்,” என்றான். பிறகு அவனே தொடர்ந்தான்.

“ஆனா கடவுள் இருப்பை ஒரு சொர்க்கம்  நரகம்னு  ஆசையை பயத்தை காட்ட உதவ கூடிய விஷயமாகவோ அல்லது, அடியாள் கூட்டத்தில் ஒருவனாகவோ ஆக்க கூடிய ஒன்னாகவோ இருப்பதை நான் விரும்பல, இதுக்கெல்லாம் எனக்கு கடவுள் தேவையில்லை,  இந்த சமூகத்தோட சமகால பொதுசட்டமும், கண்காணிப்புமே போதும்னு நினைக்கிறேன்,  அதை தாண்டிய கேள்விகளுக்கு தான் அவர் எனக்கு தேவை,  அவர் ஒருவேளை இருப்பார்னா ” என்று சொல்லி சிரித்தான்.

“என்ன உன் கேள்வி” என்றேன் நான் ஆர்வமாக.

அவன் எழுந்து கொண்டு ” சரி நான் கிளம்பறேன் ” என்றான் ,

“சொல்லாம போற ” என்றேன், அவன் ” நீயே கொஞ்ச நாள்ல அந்த கேள்விகளை என்கிட்ட கேட்ப ” என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *